Jun 25, 2007

புணர்வென்னும் கலவையில்

சுருக்கமான நெளிவுகளுக்குள்
நீள்கோடாய்
ஒரு முற்றுப்புள்ளி!

இருட்டு வண்ண திரவம்,
வேறொரு நிற கலவை,
கலக்கமாய் பார்வை!

நிகழ்களுக்கிடையே ஓட்டம்,
கனவென்னும் கற்பனை,
சிறையில் அகப்படாத
என் ரோமம்,
தேடித் தேடியே
கலைந்து போகிறேன்
வக்கிரத்தை!

புணர்வென்னும் கலவையில்
ஒருமை காணும் தனிமை!

தொலையத் தொலைய
காண்கிற மாயை,
புகை மண்டலத்தில்
நீர் வேட்கை!
வெதும்புகிறேன் நான்!

மஞ்சள் படுக்கையில்
வெளிச்சம் தேடும் என் பார்வை,
பொய் சொல்லியே
ஏமாற்றுகிறதா
உவமை?

Jun 10, 2007

மனிதம்

தாகம் தணிக்க
அடைத்து வைத்த மாசு நீர்!
ஏழைகளுக்கு நிலமில்லை,
உழுதவனுக்கும் சொந்தமில்லை!

ஒற்றையறையில் காற்றடைத்து
குளிரூட்டி நிதமும் நித்திரை!

ஆகாயத்தை ஓட்டை போட்டு
அண்ணாந்து வேடிக்கை!

ஒற்றைக் குச்சியில் நெருப்படைத்து
புகைவழியே சுகம் தேடி
அலையும் மானிடா!

(ஐம்)பூதங்களையும் சித்திரவதை செய்ய
எப்போதிருந்து பழகினாய்?



பனிமலைஎல்லாம்
கரையும் நேரத்தில்
பனி உறைய வீட்டுக்கு வீடு
குளிர்சாதன பெட்டி!


மரக்காட்டை எரித்து
கான்கிரீட் தோட்டத்தில
துளசி விதைக்கிறாய்!

இயற்கையிலிருந்து விலகி நின்று
விசித்திரத்தை பழகி
பெட்டிதட்டினால்
எல்லாம் வரும் என்று
பகுத்தறிவு பேச
வெட்கமாயில்லை?




பக்கத்துவீட்டு எழவு
தெரியாமல்
வலை அரட்டை நண்பனின்
ஜலதோஷத்திற்காக
கண்ணீரா?


நடுச்சாலையில்
உயிர் துடிக்கும் நேரத்தில்,
வெறுப்பாய் ரத்தம் பார்த்து
செவி அடைத்து
அலுவலகம் போக
கைக்கடிகாரம் பார்க்கிறாயே,


நாளையே நீ துடிக்க
இன்னொருவன்
கடிகாரம் பார்ப்பானே!

உன்னால்,
மனிதனுக்கு சிரச்சேதம்!
இயற்கைக்கு உயிர்ச்சேதம்!

மரித்துப்போனமனிதத்திற்கு
பூச்செண்டு தர
மனதில் மனிதம் விதை,

விருட்சம்கொண்டே
பல விழுதுகள் தாங்கி
நாளைய உலகுக்கு
நீயே ஒரு நல்பாதை!


அன்புடன் குழுமம் நடத்திய இரண்டாம் ஆண்டு இயல் கவிதை போட்டியில் திசைகள் ஆசிரியர் மாலனின் ஊக்கப்பரிசு பெற்ற கவிதை இது