Sep 18, 2006

சில்லுனு ஒரு ஆட்டோகிராஃப்

கல்யாணம் முடிந்த கையோடு துணைவி சகிதம் விமானம் ஏறிய நான் 12 வருடம் கழித்து இன்றுதான் என் கிராமத்து மண் மிதிக்கிறேன்.

அழகிய என் கிராமம்


பழைய புத்தகங்களுக்கு நடுவே
சிப்பியிலிருக்கும் முத்தைப் போல
டைரியின் வடிவில்
பரண் மீது தூசியுடன்
இன்னும் இருந்தது
என் நினைவுகளும் அவள் காதலும்.


முதல் வேலையாக அவளைத்தேடி,
மளிகைக்கடை அண்ணாச்சிக்கு
வாக்கப்பட்டதாய் அம்மா சொன்னது
இன்னும் காதுகளில் ரீங்காரமிட்டது.

இளமை தொலைத்து,
உருவம் பெருத்து,
மளிகைக்கடையில் அவள்.

மனதுள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்,
கண்களில் பழைய காதலுடன்,
பேச முடியாமல் அவளையே பார்த்தபடி
ஊமையாய் நின்று கொண்டிருந்தேன்.

"என்னங்க வேணும்?" அவள்.

"என்னைத்தெரியுதா வசந்தி?" ஊற்றெடுத்த காதலுடன் கேட்டேன்.

"தெரியலையே"

"நாந்தான் மணியாக்கவுண்டர் பையன் சண்முகம்" என்றேன் புன்னகை வழிய.

"அட ஆமா, சரியா அடையாளம் தெரியல. என்னங்க வேணும்?"
என்று கேட்டாள்

முகத்தில்
எந்த சலனமும் இல்லாமல்,
தொழிலை மனதில் வைத்த
அந்த மளிகைக்கடைக்காரி.

"ஒன்றும் வேண்டாம்" என்று நடையைக்கட்டினேன் வீட்டை நோக்கி.

விடியற்காலை,
தண்ணிக்காக மூட்டிய அடுப்பில்,
அந்த டைரியையும்,
அவள் நினைவுகளையும்

திணித்துவிட்டு
நிம்மதியாய் என் வாரிசை
அணைத்து முத்தமிட்டேன்!

17 விதை(கள்):

லதா said...

//
முகத்தில்
எந்த சலனமும் இல்லாமல்,
தொழிலை மனதில் வைத்த
அந்த மளிகைக்கடைக்காரி
//
காதல் தோல்வி எனினும் தன் காதலன் தன்னையெல்லாம் மறந்துவிட்டு நன்றாக இருக்க வேண்டுமென்றேதான்(சிலேடை!) வசந்தி அப்படிச் செய்தார்கள் என்று நான் எண்ணுகிறேன்.

// விடியற்காலை,
தண்ணிக்காக மூட்டிய அடுப்பில்,
அந்த டைரியையும்,
அவள் நினைவுகளையும்
திணித்துவிட்டு
நிம்மதியாய் என் வாரிசை
அணைத்து முத்தமிட்டேன்! //

டைரி மாத்திரம் சாம்பலாகலாம். ஆனால் நினைவுகளை எரித்துவிட முடியுமா என்ன ? வேண்டுமானால் வேறெதாவதில் கவனத்தைத் திருப்பிவிவிட்டு, சிறிது சிறிதாக மறக்க முயற்சி செய்யலாம்.

Hariharan # 03985177737685368452 said...

அட என்னங்க சண்முகம்,

12 வருஷம் கழித்தும் கால + உணர்வு விரயத்திற்கு முயற்சி பண்ணியிருக்கீங்க.

அதான் எப்பவோ வசந்தி உங்களுக்கு இல்லைன்னு ஆகிப்போச்சுல்ல பின்ன என்ன அண்ணாச்சி பொண்டாட்டிக்கிட்ட வந்து என்னைத் தெரியுதான்னுட்டு

போங்கப்பா போய் உங்க பாச நேசத்தையெல்லாம் உங்களை நம்பி வந்தவங்க, உங்க வாரிசுகிட்ட முழுமையாக் காட்டுங்கய்யா..

சில நேரங்களில் சிலருக்குக் காலம் காகிதப்பூக்கள் மாதிரி அர்த்தமற்ற உறவு(!?)களைத் தர நேரிடும் ஆனால்
It is euqally important to unlearn meaningless past experiences to blissfully enjoy the present..

அன்புடன்,

ஹரிஹரன்

Anonymous said...

//டைரி மாத்திரம் சாம்பலாகலாம். ஆனால் நினைவுகளை எரித்துவிட முடியுமா என்ன ? //
பெண்களால் மட்டும் மறக்க முடிகிற போது ஆண்களால் முடியாதா லதா மேடம்?

ILA (a) இளா said...

அனானி அவர்களே,
காலம் அனைத்தையும் மறக்கச்செய்யும், காதல் உட்பட. காதல் இருவருக்குமே பொதுவானது. அதுவே நான் சொல்ல வந்த கருத்து. கோர்த்து உட்டுறாதீங்க சாமி.

கதிர் said...

அழகி + ஆட்டோகிராப் = சில்லுனு ஒரு ஆட்டோகிராப்.

கலக்கல் கவிதை!

ILA (a) இளா said...

பல சினிமாக்களை கலக்கி ஒரு பதிவு போடலாம், கவிதை போட முடியாமுன்னு ஒரு சக பதிவாளர் கேட்டதுக்காக வந்ததே இந்த பதிவு. அவரு சொன்னது படங்களின் பெயரை, நான் எடுத்துக்கிட்டது கருவை. இதை சொல்லவைத்ததுக்கு நன்றிங்க தம்பி!

ILA (a) இளா said...

//யாராவது மனநிலை மருத்துவர்க்கு இந்த கதை நல்ல உதவும்//
அப்படியா? யாராவது உதவுங்கப்பா.

Porkodi (பொற்கொடி) said...

சேம் பின்ச் டூ தம்பி :))

நாமக்கல் சிபி said...

//பல சினிமாக்களை கலக்கி ஒரு பதிவு போடலாம், கவிதை போட முடியாமுன்னு ஒரு சக பதிவாளர் கேட்டதுக்காக வந்ததே இந்த பதிவு//

அந்த பதிவருக்கு ஒரு நன்றிய சொல்லுங்க!!! இல்லனா இப்படி ஒரு நல்ல பதிவு கிடைச்சிருக்குமா???

Unknown said...

மாப்பிள்ள காலையிலே கலங்க அடிச்சுட்ட.. அருமையான கவிதை இளா.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//மனதுள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்,
கண்களில் பழைய காதலுடன்,
பேச முடியாமல் அவளையே பார்த்தபடி
ஊமையாய் நின்று கொண்டிருந்தேன்.//


கல்யாணம் முடிந்தாலும் இன்னமும் "பழைய காதலோடு"ன்னு சொல்லியிருக்கிறது கஷ்டமாகத்தான் இருக்குது.
"பழைய நினைவுகளோடு" என்று சொல்லியிருக்கலாம்..

சரி உங்க மனசு உங்க நினைவு நான் என்ன சொல்றது..?

என்னங்க பண்றது அதுதான் வாழ்க்கை.. ஒரு கட்டத்துல காதலலையும் மிஞ்சி பொருளாதாரம்தான் முக்கியமாய்ப்படுகின்றது

G.Ragavan said...

இளா! இது கதையா! இல்லை கதை போல் வந்து நடந்ததையெல்லாம் சொல்லும் நினைவுகளின் சுருளலைகளா! இல்லை அந்தச் சுருளலைகளில் மிதந்து வந்து உள்ளக் கரையினில் தினந்தினம் மோதி மோதி உடைந்து நொறுங்கும் நீங்குமிழிகளான பழைய ஆசைகளா! இல்லை அந்தப் பழைய ஆசைகளையெல்லாம் உண்டாக்கிய இளவேனிற்காலத்து வண்ண மலர்களில் பிறந்து வழிந்து ஒழுகிப் பரவும் நறுமணம் என்னும் பாலியல் ஈர்ப்பா! என்னப்பா! என்ன? (அப்படியே சிவாஜி போல வசனமாக படித்துப் பார்க்கவும் )

Anonymous said...

@இளா...

வெகு நாட்களுக்கு பிறகு இங்கு வருகிறேன் இளா...

இந்த போஸ்ட்'ல கவிதை நயத்தை விட ஒரு கதையின் சாயல் தான் அதிகமா இருக்கு.. நல்ல போஸ்ட்

காதல் பொதுவானது ஒத்துக்குறேன்... மறக்க முடியுமா முடியாதாங்குறது எல்லாம் அவரவரோட சாய்ஸ்... உருவாகும் உணர்வுகளை தொலைப்பது என்னைப் பொருத்தவரை ஒரு பொய்..

காலம் எந்த காயத்துக்கும் மருந்து போடாது... புதுசா நோண்டுறதுக்கு வேற ஒரு காயத்தை தரும்... அவ்ளோதான்..

சோ .. காதலியை மறப்பதும்.. பொய்... காதலை மறப்பது சுத்த பொய்... முன்னாள் காதலி இன்று ஒரு தோழியா இருக்கலாம்.. அது நாம் நடந்துகிட்ட முறையைப் பொருத்து.. காதலோ, நட்போ... வரம்பு மீறினால் எல்லாமே அத்துப் போகும்... அது மட்டும் தான் உண்மை..

வாழ்த்துக்கள்

ராசுக்குட்டி said...

//அவரு சொன்னது படங்களின் பெயரை, நான் எடுத்துக்கிட்டது கருவை. இதை சொல்லவைத்ததுக்கு நன்றிங்க தம்பி!//

நல்லா பண்ணியிருந்திங்க இளா... சில்லுன்னு இருந்துச்சு படிக்க

//தன் காதலன் தன்னையெல்லாம் மறந்துவிட்டு நன்றாக இருக்க வேண்டுமென்றேதான்// அப்படியெல்லாம் முடிக்காம இருக்றதுதான் நல்லா இயல்பா இருந்துச்சு!

என்னென்னமோ ஃபீல் பண்றீங்க உங்களுக்கே நல்லா இருந்தா சரி!

Syam said...

இது கதையா கவிதையா...எதுவா இருந்தாலும் மொத்ததில் ஜூப்பர்ங்கோவ் :-)

Anonymous said...

முகத்தில்
எந்த சலனமும் இல்லாமல்,
தொழிலை மனதில் வைத்த
அந்த மளிகைக்கடைக்காரி
//
காதல் தோல்வி எனினும் தன் காதலன் தன்னையெல்லாம் மறந்துவிட்டு நன்றாக இருக்க வேண்டுமென்றேதான்(சிலேடை!) வசந்தி அப்படிச் செய்தார்கள் என்று நான் எண்ணுகிறேன்.

// விடியற்காலை,
தண்ணிக்காக மூட்டிய அடுப்பில்,
அந்த டைரியையும்,
அவள் நினைவுகளையும்
திணித்துவிட்டு
நிம்மதியாய் என் வாரிசை
அணைத்து முத்தமிட்டேன்! //

டைரி மாத்திரம் சாம்பலாகலாம். ஆனால் நினைவுகளை எரித்துவிட முடியுமா என்ன ? வேண்டுமானால் வேறெதாவதில் கவனத்தைத் திருப்பிவிவிட்டு, சிறிது சிறிதாக மறக்க முயற்சி செய்யலாம்

கலக்கல் கவிதை!

(லதா வாழ்த்து super)

Deekshanya said...

நல்ல கவிதை
- தீக்ஷன்யா