Dec 11, 2009

முண்டாசுக் கவி

பல வருடமாச்சு எங்க தேசம் உனை மறந்து!
ஆச்சர்யம் ஒன்றுமில்லை
நீ என்ன கட்சியா
ஆரம்பித்தாய்?

பேசினாய் எழுதினாய்,
கரடியாய் கத்தினாய்,
தமிழென்றாய், சுதந்திரமென்றாய்,
சமஉரிமை என்றாய், ஜாதியும் இல்லையென்றாய்,
எவனுக்கு வேணும் உன் வார்த்தை,
இடுப்பு மச்சம் தெரியுதாம்
கிளம்புகிறோம் வெண்திரைக்கு.





உனக்கும் ஜாதிமுலாம் பூசிவிட்டோம்
மறைத்துக்கொள் உன் முகத்தை,
முண்டாசு எதற்கு இருக்கிறது?
அன்பென்றால் கொட்டுவது முரசில்லை பைத்தியக்காரா,
தலைமேலே இடியே விழுகிறது.

உனக்கு இன்று பிறந்தநாளாமே
யாருக்குத் தெரியும்
எதற்கு தெரிய வேண்டும்?
தெரிந்துதான் என்ன ஆகப் போகிறது?
வாக்களித்தால் காசு கிடைக்கும்,
உனை வாழ்த்தினால் ஒரு சிங்கிள் டீ கிடைக்குமா?

அடைபட்டு போனோம் சிறுவட்டத்தில்
வேண்டாம் உனது கவிதைகள்
மனம் பிறழ்ந்தவர்கள் படிப்பார்கள், மகிழ்வார்கள்.
நாங்களெல்லாம் தினக்கூலிகள்,
மாரடித்தே பழக்கப்பட்டுவிட்டோம்.

உனது படைப்புகள் எல்லாம் வரலாற்றுப்
புத்தகத்தில் வருமென காத்திருப்பவர்கள்.
மனமேற்றி வாந்தியெடுத்தால் ஐந்து மதிப்பெண்ணுக்கு
மட்டுமே யோக்கியப்படும் உனது படைப்புகள்.

பாரதத்தில் பிறந்தாய்,
பாரதியாய் வாழ்ந்தாய்,
பாராமுகமாய் இருக்கிறாய்,
பத்திரமாய் மறக்கப்படுவாய்!

வாழ்க தமிழனும், தமிழும்!

Pic : Thanks http://www.flickr.com/photos/balu/

Nov 6, 2009

காதலியைத் தானம் செய்த மணவறை

பத்து விரல்களால் அவளைக் கற்பழிக்கிறேன்,
கீபோர்டில் என் கைகள், மானிட்டரில் அவள்.
கற்புநெறி மறந்தவிட்டிருந்தன
இணைய விடுதிகள்.


அரசியல்வாதிகளின் புரட்டு,
அதிகாரிகளின் அலட்சியம்,
எல்லாம் சேர்ந்த
சமூகத்தின் மீது கோவம்
அனானியாய் திட்டிவிட்டேன்
ஒரு பதிவில்
கோவம் தணிந்திருந்தது.

பார்த்த இடமெல்லாம் காமம்
பார்ப்பதெல்லாம் காமம்
வெந்துத் தணிந்தது காடு
வாழ்க்கை மீது பயம் வந்திருந்தது.

நண்பர்களைத் தொலைத்த தேசம்,
காதலியைத் தானம் செய்த மணவறை,
சத்தியம் செய்த தலைகள்,
மெய் மறுத்த விழிகள்,
எல்லாம் ஞாபகம் வருவதில்லை
மீண்டும் தவறிழைக்கும்போது.

Oct 23, 2009

சிகப்பு விளக்கு

அந்த நடுநிசியில், ரொம்பவும் மங்களாய் எரிந்தபடி இருந்தது அந்த சிகப்பு விளக்கு. சொல்லப் போனால், சிகப்பு வெளுத்து மஞ்சளாய் மாறியிருந்தது. வாடிக்கையாளர்களும் வருவதும் போவதுமாய் இருந்து கொண்டே இருந்தது. உலகத்தில் எதற்கு வேண்டுமானாலும் கிராக்கி இல்லாமல் போகலாம். இதற்கு மட்டும் கிராக்கி குறைவதே இல்லை.

விளக்கின் கீழ் அமர்ந்திருந்தான் பாபு, பான்பராக் மென்று மென்று கடவாய் பற்களில் இரண்டை இழந்திருந்தான். கீழ் உதட்டில் புண் ஆகியிருந்தது. தூக்கம் வரவே ஒரு பான்பராக்கை பிரித்து அப்படியே கொட்டிக்கொண்டான். கீழ் உதட்டின் உட்புறம் நெருப்பாய் எரிவது அவனுக்கு ஒன்றும் புதிதில்லை.


வேகமாய் வந்தார்கள் சுரேசும், வேலுவும்.

“ஒருத்தர் மட்டும்தான்” பாபு.

சுரேஸ் தங்கவேலுவை பார்க்க, முதலில் போன சுரேசை தடுத்து ”மொதல்ல காசை வை, அப்பால உள்ளாற போ” என்றான் பாபு.

யோசிக்காமல் காசை பாபுவிடன் கொடுத்துவிட்டு உள்ளே போனான் சுரேஸ்.

பத்து நிமிடம் கழித்து, பேண்ட் ஜிப்பை போட்டவாறே வெளியே வந்தான். வியர்த்திருந்தான், களைத்துமிருந்தான். பெல்ட்டை இறுக்கிப்போட்டுக்கொண்டான். தலையை கையால் கோதிவிட்டான். வேலு பாதி அடித்துமுடித்திருந்த வில்ஸ் பில்டரை வாங்கி நன்றாக இழுத்த்த்து கண்மூடி மேல்நோக்கி புகைவிட்டான். ஏதோ ஜென்ம சாபல்யம் அடந்த மாதிரி அவன் முகத்தில் பேரானந்தம். வியர்வையை சட்டையால் துடைத்துக்கொண்டான்.

“என்னடா போலாமா?” சுரேசிடம் கேட்டான் வேலு.

”நீ போவல?” பாபு.

”இல்லே” வேலு.

இருவரும் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வேறு கதை பேசி நடக்கலானார்கள்.

என்ன ஆகியதோ தெரியவில்லை. மஞ்சளாய் எரிந்த பல்பும் அணைந்தது. . கீழுதடு எரிய &%&^%&$^&^$%^& எனத் திட்டியபடி இன்னொரு பான்பராக்கை பிரித்து போட்டுக்கொண்டான் மாநகராட்சி கழிவறை குத்தகைக்காரன் பாபு.

Jun 30, 2009

ஆணிவேர்

எனக்கு சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. என் தந்தை சிங்கப்பூர் வந்தவுடன் என் சித்தப்பாவும் பங்காளிகளும் வேலை தேடி பட்டணம் போய்விட்டதாக கேள்வி. தாத்தா பாட்டி என யாருமே எனக்கு நினைவில் இல்லை. நான் பிறப்பதற்கு முன்னமேயே அவர்கள் இறந்துவிட்டிருந்தார்கள். எங்கள் குடும்பமும் விவசாய குடும்பம்தானாம், அப்பா சொல்லித்தான் தெரியும். நன்றாக படிக்கும் எனக்கு வயது 17. பந்துக்கள் பலர் இருந்தும் சொல்லிக்கொள்ள சொந்தம் என்று யாருமில்லை என்கிற சோகம் எனக்கு நிறையவே உண்டு.மாமா, அத்தை, சித்தப்பா சித்தி எல்லாம் படித்து கேட்டதோடு சரி. உறவுகள் இல்லாமல் இருப்பதும் ஒரு அநாதை போன்ற ஒரு உணர்வு வர, அப்பாவிடம் கேட்டேன்.

"அப்பா, நமக்கு சொந்தம்னு யாருமே இல்லையா?"

"இருக்காங்கப்பா, பங்காளி வழியில நெறைய சொந்தம் இருக்காங்க. ஒரு தலைமுறை போனவுடன் அவுங்க புள்ளைங்க எல்லாம் பழைய சொந்தங்களை தேடறதுமில்லே, பழகறதும் இல்லே. அவுங்க அவுங்க அவுங்களுக்கு வசதியான மக்களோட பழக ஆரம்பிச்சிறாங்க. ஏதாவது விசேசம்னா மட்டும் வந்து போயிட்டு இருந்தாங்க, அப்புறம் ஏதோ காரணம் சொல்லி வராம போக, தொடர்பில்லாமப் போச்சு. எதுக்கு கேக்குற?"

"இல்லே, எனக்கு நம்ம சொந்தங்களைப் பார்க்கனும் போல இருக்கு"

தூக்கி வாரிப்போட்டது அப்பாவுக்கு? ஏன், எபப்டின்னு கேட்காம, "சரி, உன் விருப்பம் போல செய்?"னாரு.

முதல்ல இருந்த சொந்தத்தை கேட்டேன், அப்பா சொன்ன யாருமே அந்தந்த முகவரியில இல்லே. முகவரியே மாறும்போது கூப்பிடறதுக்கு தொலைபேசி மட்டும் கிடைச்சுருமா என்ன? அப்பாவுக்கு தெரிஞ்ச ஒரே சொந்தம், கண்ணுப்பையன் சித்தப்பா மட்டும்தான். அப்பாதான் பேசினாரு. அவுங்க பையனும் புள்ளையும் அமெரிக்காவுல இருக்காங்களாம். அவுங்க நம்பரை மட்டும் வாங்கித்தந்தாங்க. என்ன பேசறதுன்னு தெரியாம அவுங்கள கூப்பிட்டேன்.

"நான் ராஜா, செல்லிக்காட்டு பெரியண்ணன் பேரன்..." அப்படின்னு ஆரம்பிச்சு, என்ன மொதல்ல அறிமுகம் பண்ணிக்கிட்டேன். சுரத்தில்லாம பதில் வந்துச்சு..சரி அதுக்கென்ன இப்போங்கிற மாதிரி பேசி வெச்சுட்டாங்க. அன்னிக்கு ராத்திரி முழுசும் அழுது தீர்த்தேன். அவ்வளவுதானா சொந்தம்? இதே நானும் அமெரிக்காவுல இருந்திருந்தா, இப்படி பேசி இருப்பாங்களா? எனக்கு என்ன கொறைச்சல்? இப்படி பல கேள்விங்களோட விடியற்காலையில் தூங்கிப்போனேன். காலையில அப்பா எழுப்பி சேலத்துல இருந்தே ரமேஷ் பேசுறதா சொன்னாரு.

"என்னப்பா,யாரு என்னான்னெ தெரியாம என்ன பேசறது?"

"நேத்து நீ கண்ணுப்பையன் பையனோட பேசுனியே அப்போ மட்டும் தெரிஞ்சுதா?"

சவுக்கடி மாதிரி இருந்துச்சு அப்பா கேட்டது.

ரமேஷ் கிட்ட பேச ஆரம்பிச்சேன். எங்கயோ ஒரு நுனி சொந்தம் அது. ரொம்ப்ப ரொம்ப தூரம்னு கூட சொல்ல தெரியாத ஒரு சொந்தம். நல்ல நிலைமையில இருக்கிறான் போல, என்ன விட மூணு வயசு பெரியவன். நிறைய பேசினோம், சம்பந்தமே இல்லாம. சினிமா, அரசியல், சிங்கப்பூர் வாழக்கை, என்னோட பள்ளி, புடிச்ச PS3, அவனுக்கு புடிச்ச சாப்பாடு, மணிக்கணக்குல பேசினோம். அப்புறம் ரெண்டு பேருமே சேர்ந்து சொந்தத்தை தேடற நிலைக்கு வந்துட்டோம். அப்பாகிட்டே மூணு மாசம் இந்தியா போறேன்னு சொன்னேன். அப்பாவுக்கோ இதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்லே. ஆனா என்னோட விருப்பம் ஜெயிச்சது.

இந்தியா....

ரமேஷுக்கு அப்பா இல்லே, அம்மா மட்டும்தான்.மளிகை கடை நடத்துறாங்க. கொஞ்சம் வசதியான வீடு, அவுங்க அம்மா உழைப்பு தெரிஞ்சது. ரமேஷுக்கு காலேஜ் விட்டா கடை. அவன் உலகம் அவ்வளவுதான். கொண்டலாம்பட்டி பை-பாஸ்ல தம் போட்டுட்டு, ஏற்காட்டுல டீ சாப்புடறதுன்னு ஒரு புது வாழ்க்கை. எனக்கு ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு.

ரமேஷ் செம கில்லாடி.அவன் மொதல்ல என்னை கூட்டிக்கொண்டு போனது குலதெயவம் கோயிலுக்கு. பண்டாரத்துக்கு தாத்தாவைத் நல்லா தெரிந்திருந்து வைத்திருந்தான்.

"தாத்தா, எங்க சொந்தக்காரவங்க யாராவது போன விசேசத்துக்கு காசு குடுத்தாங்களா?" ரமேஷ்.

"அட யார்ரா இவன் கூறுகெட்டவன். யாரு குடுக்காம போறாங்க? உங்க பெரிய மாமன் கூட, அதாண்டா நாமக்கல்ல லாரி பட்டறை வெச்சிருக்காருல்ல.. அவரு கூட மூணு லட்ச ரூவா குடுத்தாரு"

"அவுங்க போன் நம்பரு குடு தாத்தா. பேசோனும்'

"ஏன் உம்மாமன் உன்கிட்ட பேசறது இல்லையா"

"அதெல்லாம் உனக்கெதுக்கு நம்பர குடு நாம்பேசிக்கிறேன்"

இப்படி ஒவ்வொரு அடையாளத்தையும் பிடித்தோம்.

மொத்தம் 13 மாமா, 8 அத்தை, 7 சித்தப்பாக்கள், அவர்கள் வழி வந்த சொந்தங்கள் என 500 பேருக்குமேலேயே சொந்தங்களின் எண்ணிக்கை வந்தது. ஒருவருக்கும் என்னை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. காரணம் என் தந்தை விட்டுவந்த தொலைவு. உறவுகள் தொலைய வெளிநாட்டிற்குச் செல்லும், சொல்லும் எல்லாம் காரணங்களும் எனக்கும் இருந்தது. எல்லார் வீட்டுக்கும் பேசினோம், சென்றோம்.

எடப்பாடி முருகேசன் மாமா, என்னை ரொம்பவே கவர்ந்தார். ஆட்டோ ஒட்டுகிறார், ஊரில் அவருக்குத் தெரியாத மனிதர்களும் இல்லை, சந்து பொந்துகளும் இல்லை. வசதி குறைந்தவரான அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 45 வயசு மட்டுமே ஆகியிருந்தது.

"மாமா, நான் நம்ம ஊருக்கு போலாம்னு இருக்கேன்"

"எந்த ஊருக்குடா? சிங்கப்பூருக்கா? பின்னே இங்கேவா இருக்கப்போறே?"

"இல்ல மாமா, கொழிஞ்சிக்காட்டூருக்கு"

ஐந்து நிமிடம் மாமா ஒன்றுமே சொல்லவில்லை. பிறகு "உனக்கு யாரத்தெரியும்னு அங்கேப் போற? நம்ம காட்டை எல்லாம் வித்தாச்சு, ஊருக்குள்ள சொந்தம்னு சொல்லிக்க ஒரு பய இல்லே. அப்புறம் என்ன வேலை. வந்தமா நம்ம கூட கொஞ்ச நாள் இருந்தோமான்னு இருப்பியா அத வுட்டுப்புட்டு"

என்னுடைய வழக்கமான இருக்கம், பிடிவாதம் அங்கேயும் வென்றது. மாமா, நான், ரமேஷ் மூவரும் ஒரு நாள் என் கிராமத்துக்கு போக நாள் குறித்தாயிற்று.

அந்த நாள்..

மாமா ஏற்பாடு செய்திருந்த காரில் சென்றோம்.

"ராஜா, எங்கேடா போறது? அங்கே போயி என்னத்த பார்ப்பே? "

"போவோம் மாமா, தாத்தா பாட்டி இருந்த இடத்தை பார்ப்போம்"

"பார்த்து?"

பதில் தெரியாத கேள்வி. பார்த்து என்ன செய்யப் போகிறேன்? நான் படித்த பழைய பள்ளிக்கூடத்தை பார்க்கும் போதும், பழைய புத்தகத்தினை பார்க்கும் போதும், என் சிறுவயது நணபனைப் பார்க்கும் போதும் மனதுக்குள் இனம் தெரியாத ஒரு வெறுமை வரும். அது என்னவென சொல்ல முடியாத ஒரு இனம் புரியாத உணர்வு. சோகமே மிகுதியாய் தோன்றும். அது போலவே இதுவும் இருக்கும்.

"என்னடா பதிலே சொல்ல மாட்டேங்குற, சுடுகாட்ட பார்க்கவா அங்கே இருந்து வந்த?"

"மாமா, உங்களுக்கு எல்லாம் சொந்தம் பந்தம் கூட இருக்கன்னு ஆசை இல்லியா?"

"அடப்போடா, கல்யாணம் ஆகியிருந்தாலாவது பொண்டாட்டிங்கிற சொந்தம் வந்து இருக்கும். நமக்கு அதுவும் குடுப்பினை இல்லே"

"இல்லே மாமா, ஒரு விசேசம், எழவுன்னா கூட நம்ம சொந்தத்துக்கு தெரியாது. இதுக்கூட சொந்தம் இல்லாட்டா என்னாத்துக்கு?"

"ஏன் சொந்தக்காரன் வந்தாத்தான் பொணம் எரியுமா?" சத்தமாக சிரித்தார். "சொந்தமெல்லாம்ம்ம்... கூட இருந்தாத்தான். உனக்கும் எனக்கும் பொழப்புதான் முக்கியம். ஒரு ஜான் வயித்துக்குன்னு சொல்லிகிட்டு நாம தொலக்கிறது நெறைய அதுல மொதல்ல போறதே சொந்தந்தான்"

காசாங்காடு ஊராட்சி உங்களை வரவேற்கிறது. சிமெண்டினால் ஆனா அழுக்கேறிய பலகை. என் கிராமம். என் தாத்தன் பாட்டி, முப்பாட்டன் வாழ்ந்த இடம், முதன் முறையாய் பொதுவில் அழுதேன். காரணம் தெரியவில்லை.

"டே, இங்க பாரு? இந்த மயித்துக்குதான் வரவேணாம்னு சொன்னாரு மாமா. கேக்குறியா. என்னாத்துக்கு அழுவுற என்ன இருக்குன்னு சொல்லு?"

"என்னமோ தெரியலடா, சொந்தம் இல்லாம வளர்ந்த எனக்கு இது எல்லாம் புதுசா இருக்கு"

டீ கடை ஒன்று இருந்தது. மாமாதான் போய் விசாரித்து விட்டு வந்தார்.

"சொந்த ஊருல என்ன மாமா விசாரிச்சிகிட்டு"

"இல்லடா, நானும் சின்ன வயசுல இங்கே இருந்துப்போயிட்டேனா. அதான். மொதல்ல ஒத்தயடிதான் இருந்திச்சு. இப்போ ரோடெல்லாம் போட்டிருக்காங்க. அதான் நம்ம காட்டுக்கு எப்படி போறதுன்னு கேட்டேன். ஊருல இப்போ 10 இல்லைன்னா 15 பேர்தான் இருக்காங்களாம். மீதி எல்லாம் பொழப்ப தேடி நம்மள மாதிரியே வெளியூருக்குப் போயிட்டாங்களாம்"

போற வழியில் ஊரைப் பார்த்தேன் பொட்டல் காடு. ஒரு வசதியும் இல்லாமல் இருந்தது.
எப்படியோ உச்சி வெயில் நேரத்திற்கு தாத்தா இருந்த வீட்டிற்கு வந்தோம். இடிந்து சிதிலமாகி இருந்தது. கொஞ்சமாய் மண் திட்டு மட்டுமே இருந்தது. மீதி இருக்கும் என் பாரம்பரியம், என் பாரம்பரிய சொத்து, என் பூர்வீகம். மழை நீரிலும், வெய்யிலிலும் கவனிப்பாரற்று கிடந்த வீடு போல. மனதில் எதுவுமே தோன்றவில்லை. ஏதோ பொருட்காட்சிய பார்ப்பது போல் பார்த்துகொண்டிருந்தேன். ரமேஷ் யார் கூடவோ தூரமாய் இருந்த மேட்டின் மீது ஏறி தன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தான். தாத்தாவையும் பாட்டியையும் புதைத்த இடத்தை தேடி அலைந்தோம். கடைசியாய் ஒரு பெரியவர் வழி சொன்னார். அவரும் ஒரு கேள்வி கேட்டார் "என்னாத்துக்கு தேடுறீங்க. ஏதாவது புதையல் கிதையலா?"

சிரித்தபடியே போனோம். புதைத்த இடம் அடையாளம் தெரியாத அளவுக்கு பள்ளமாய் இருந்தது. ஐந்து நிமிடம் மெளனமாய் இருந்தேன். ரமேஷ் மட்டும் என் கூட இருந்தான். மாமா எங்கோ பார்த்தபடி சிகரெட் பிடித்தபடி இருந்தார். சரி, அவருக்கும் என் தாத்தாவுக்கும் தூரத்து சொந்தம்தானே. ஊரை விட்டு மெயின் ரோட்டிற்கு வரும்பொழுது இருட்டத்தொடங்கி இருந்தது.

தூரமாய் ஒரு வேப்பம் மரம் தெரிந்தது, குருவிகளின் கீச்சுக்குரல்கள் கேட்டது, வேப்பம் பழங்கள் காற்றில் அசைந்து விழுந்தன, ஆடியது இலைகள், கீழே விழுந்த பழங்களை பொறுக்கிக்கொண்டிருந்தாள்
ஒரு நரைக்கிழவி! நாளை எப்படியும் சந்தையில் விற்றுவிடுவாள்,ஏதோ ஒரு ஊரில் மீண்டும் ஒரு மரம் வளரும், மீண்டும் பழங்கள் பழுத்து கீழே விழும்.

Nov 8, 2008

ராமனைத் தேடும் தமிழர்கள்

தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது
இராமாயணம்.
இராவணன் உருவில்
பக்க்ஷே இருக்க
ராமனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
தமிழர்கள்

Oct 26, 2008

தங்கைக்கோர் வாழ்த்து!






Sep 18, 2008

காதல் ஜூரம்-2

என்ன கொடுமை தெரியுங்களா என்னோட இந்தக் கதையின் கதாநாயகியை மாதிரியே பொசுக்குன்னு ஒரு பதிவர் வந்துட்டாங்க. அதான் இந்த இடைவெளி(ஒரு வருசமா?).


ஒரு முகம் தெரியா பெண்ணின் அனானி மறுமொழி கிடைச்சதும் சந்தோசம் தாங்கல. அப்புறம் ஒரு சந்தேகம் வந்துருச்சு ஒரு வேலை ராயலை சிங்கமெல்லாம் சேர்ந்து ரவுண்ட் கட்டின கதை மாதிரி ஆகிருமோன்னு ஒரு 'பல்பு'ம் எரிஞ்சது. எதுக்கும் இருக்கட்டும்னு அந்த ID ஜிடாக்ல சேர்த்துட்டு........

எல்லாரும் கண்டிப்பா மொத பகுதிய மறந்திருப்பீங்க, அதனால ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்துருங்க.(Click here)





Onsite வந்துட்டா மட்டும் நமக்கு எங்கிருந்தோ மொழி மேல அப்படி ஒரு வெறி வந்துரும். காரணம் வேற ஒன்னும் இல்லீங், வெள்ளையும் கருப்பையும் பார்த்து பார்த்து, அவங்க என்ன பேசறாங்கன்னு தெரியாம உதட்டையே உத்து உத்து பார்த்து, பாதி அர்த்தம் புரிஞ்சி, மீதிக்கு நாமே fill in the blanks பண்ணினா வரத்தானே செய்யும். ரகுவுக்கும் அப்படித்தான் வந்துச்சு. தமிழார்வம். அதனாலயே நெறைய படிச்சு, blogs எழுத ஆரம்பிச்சான்.

வாரக் கடேசிக்கு எங்கே போலாம்னு யோசனை பண்ணினான். ஒரு பட்டியலே போட்டான் ரகு.



  • பாலா வீட்டுக்கு போயி அவனுக்கு ஒரு சலாம் போட்டு ”பகுன்னாரா?” அப்படின்னு அவன் வூட்டுக்காரம்மாகிட்ட கேட்டாவே உச்சில முடி நிக்கிற மாதிரி காரமா கோழிச் சாப்பாடு கிடைக்கும்.

  • விஜிய இங்கே கூப்பிட்டு ரெண்டு படத்த பார்த்துட்டே, கரோனாவை(பீர்) தள்ளி flat ஆகலாம்.

  • வடக்கத்து ஜிகிட்டுக்கு போனப் போட்டு “அயாம் ஃபைன் யார்? யூ கம் ஹியர்னா” அப்படின்னு குச் குச் ஹோத்தா பண்ணலாம். ஆனா ரெண்டு நாளைக்கு வழிய முடியாதே... அதுக்காக ஞாயித்துக்கிழமை செம தூக்கம் போடனும்.

இப்படி பட்டியல வெவரமா வேகமா போட்டுட்டு இருக்கும் போது “டொங்க்”. எவனோ ஜிடாக்ல கூப்பிடறான்னு நினைச்சுகிட்டே போனா பூ படம் போட்டு தெரியாத பேர்ல சேட்ல ஒரு ஆளு. ஒரு வேளை பேர மாத்தி விளையாடுற வ.வா.ச மக்களா இருப்பாங்களான்னு கூட நினைச்சான்.

"Hi, How are You?" அப்படின்னு முதல் வரி.

ID பார்த்தான் ”traehteews_sruoy”. என்ன எழவுடா இது. ஏதோ ஒன்ன விக்க வர பொம்பளைங்க ID மாதிரியே இருக்கு. சரி நமக்கும் நேரம் போவலை என்ன நடக்கும்னு பார்க்கலாம்.

“I am fine, whatzup"

"This is my New ID, whn is your next blog" ஆஹா அதுவா இது. தூள்டா.

"In a day. What is your name? where are you from? how did u get my blog? do you like it? ho..."

"ஹல்லோ நிறுத்துங்க, எதுக்கு இத்தனை கேள்வி? என் பேரு ராஜி, உங்க பாஷையில் சொன்னா புதரகம்தான். உங்களை மாதிரி Onsite எல்லாம் வரலை. இந்தியாவுல பொறந்து, இங்கே படிக்க வந்தேன். அப்படியே வேலை தேடி, செட்டிலாகிட்டு இருக்கேன். இப்போ உங்க ஊருக்குப் பக்கம்தான். போதுமா? உங்களைப் பத்தி நானும் விசாரிச்சுட்டேன். Tamil ப்லொக் எழுதறவங்களை விசாரிக்கிறது கஷ்டமா என்ன? உங்கள பத்தி விவரத்தை நாஞ்சொல்லவா?”

”ஆஹா. இவ்வளவு தூரம் ஆகிப்போயிருச்சா? சரிங்க உங்க நம்பர் கொடுங்க. கூப்பிடறேன்”.


“அதுக்குள்ளேயே சந்தேகமா? நான் பொண்ணுதான். கலாய்க்க எல்லாம் இல்லீங்க. உங்க புரொபல் பார்த்தேன், பக்கத்து ஊர்தான்னு தெரிஞ்சு போயிருச்சு. அதான் சேட்டிங். எப்படியும் வாரக் கடேசி சும்மாதானே இருப்பீங்க. மொக்கைப் போட ஆள் இல்லைன்னு கவலைப்பட வேணாம். நான் சேட்டுவேன், நாள் முழுக்க”

“சரி நீங்க பதிவ படிக்கிறீங்களே. நீங்க பதிவெல்லாம் எழுதுவீங்களா?”

“ஓ எழுதுவேனே. ஆனா வேற பேர்ல. உங்களால கண்டுபிடிக்க முடியாது”

“அடச்சொல்லுங்க”


“நீங்க கண்டிப்பா படிச்சிருப்பீங்க”

“அப்படியா. அப்போ தெரிஞ்ச முகம்தான்னு சொல்லுங்க”

“படிச்சா அதிர்ச்சியாகிர மாட்டீங்களே”

இருதயத்துடிப்பு அதிகமாக ஆச்சு “என்னாங்க, நக்கலா. பதிவச் சொல்லுங்க, நான் நீங்க யாருன்னு சொல்லுறேன். பதிவெல்லாம் கம்மியாத்தான் போட்டிருக்கேன். ஆனா எல்லாப் பதிவர்களையும் தெரியும். 80 பேர்க்குமேல சேட்டுல சேர்த்து வெச்சிருக்கேன். தெரியுங்களா?”

”பதிவோட பேர அப்புறம் சொல்றேன். இப்போ கூப்பிடுங்க” எண் திரையில வந்து விழுந்துச்சு.

“9 மணிக்கு மேல கூப்பிடறேனே, இன்னும் 45 நிமிஷம்தானே இருக்கு”

“ஓஹ், free minutesக்காகவா? சரி கூப்பிடுங்க”

மனசு 45 நிமிசத்துக்கெல்லாம் காத்திருக்க மாட்டேன்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சது. தொடர்ச்சியான 3 வது தம்ம அடிக்கும் போதுதான் ஒரு கேள்வி வந்துச்சு.


”லவ்வு வந்துருச்சா?” பொண்ணு சேட் பண்ணினாவே லவ்வுன்னு நினைக்கிற அளவுக்கு இருக்கிற சாதாரண பையன் நம்ம ரகு இல்லேன்னா கூட, அவனும் பையந்தானே.

9 மணி ஆனவுடன் எண்ணைத் தட்டினான். ஒரு ரிங்லேயே ”சொல்லுங்க ரகு”ன்னு ஒரு வீணை பேசிச்சு. அசடு வழிஞ்சே 30 நிமிஷம் பேசினான் ரகு. வழக்கமான விசாரிப்பு முடிஞ்சு, வழக்கமான குடும்ப கதை முடிஞ்சு, என்ன சமைக்கத்தெரியும் பேசி, சத்யம், குசேலன், தசாதவதாரம் ஆரம்பிச்சி ஒரு படம் விடாம, புடிச்ச சீன், புடிக்காத பாட்டு அப்படின்னு அபூர்வ சகோதரர்கள் வரும் போது மணி 3:20.

ரெண்டு பேருக்கும் மனசே இல்லாம தூங்கப் போனாங்க. ஆனா ரகு தூங்கல.

காலையில 6:10 மணிக்கு மணி அடிச்சது.

“தூக்கமே வரலேடா. நீ தூங்குனியா?” முதன் முறையா டா போட்டு பேசினாள். போன்ல பேசிகிட்டே காபி முடிஞ்சு, உச்சா போயி, ஆயி போயி 9 மணி வரைக்கும் போச்சு. அன்னிக்கு நல்லா தூங்கல ஆனா ராத்திரி 10 மணிக்கே போன் பேசுறத நிறுத்திட்டாங்க. இப்படியே சனிக்கிழமை, போனும்,. சேட்டும்னு ஓடிப்போக, ஏதோ ஒன்னு ரெண்டு பேர் மனசிலேயும் ஓடி வந்து உக்காந்துகிச்சு.

ஞாயிறு, காலை 7:20 மணிக்கு.

”டொங்க்”

“ஹேய் உன்னோட பதிவென்னென்னு சொல்லவே இல்லியே”

”சொன்னா சிரிப்பேடா. வேணாம்”

“அடச்சொல்லுன்னா”


“உன்ன மாதிரி எல்லாம் கவிதை எல்லாம் எனக்கு வராது”

”அப்போ என்னோடது எல்லாம் கவிதங்கிறியா?”


”பின்னே? நீ கவிஜன். நான் மனசில பட்டத எழுதறவ”, ஆர்வத்தைத் தூண்டிக்கிட்டே போனா.


“சொல்றியா? இல்லாட்டி போவட்டுமா?”


”சொல்றேன், சொல்றேன்”



”டொங்க்” பதிவோட முகவரி வந்துச்சு.



“பகுத்தறிவாளர்கள் வாழ்க” அப்படின்னு பெரியாரைப் புகழ்ந்தும், பிராமிணர்களைச்சாடியும், அதேசமயம் செம நாகரிகமா எழுற ஒரு ஆம்பளைப் பதிவரின் பதிவு அது.

“எதுக்குடி இதத்தர்றே. இத நான் படிக்கிறது இல்லே”

“நாந்தான் இத எழுதறேன், நம்பலைன்னா ஒரு பின்னூட்டம் போடு. நான் வெளியிடறேன்.”

ஒரு பதிவுக்கு “நல்ல பதிவு" அப்படின்னு பின்னூட்டம் போட்டான். “போட்டாச்சு”


“இப்போ பாருடா” பின்னூட்டம் வெளியாகிருந்தது.

மனசுக்குள்ளே ஏதோ இனம் புரியாத கிலி வந்துச்சு. எப்போ பார்த்தாலும், தினமலர், பாஜக, பிராமிணர்கள்ன்னு தாக்கு தாக்குன்னு தாக்கி, எப்பவுமே சூடா இருக்கிற பதிவு அது. பாதி பேருக்கு மேல அந்தப் பதிவர் மேல செம காண்டுல இருந்தாங்க. எல்லாரும் ஆம்பிளைன்னு நினைச்சு இருக்க ”இது ஒரு பொண்ணா?”.

“என்னடா சத்தத்தையே காணோம்”

“அதிர்ச்சியா இருக்கு”

“ஏன்?இந்தப் பதிவ எழுதறது ஒரு பொண்ணான்னுதானேன்னா? நாந்தான் எழுதறேன். ஏன் எழுதக்கூடாதா?”

“எழுதலாம். தப்பே இல்லே”

“அப்புறம்?”

“ “

“என்ன சத்தத்தையே காணோம்”


“டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்”

”என்னத்தைப் பேசச்சொல்றே” என்றான் பூணூலை அழுத்தி பிடித்தப்படி...


விதி: காதலுக்கு, அவா வீடு, பெரியவா வீடுன்னெல்லாம் தெரியாது.