Nov 15, 2007

Grand Canyon

Grand Canyon போயிருந்த சமயம் எடுத்த படங்கள்





Oct 23, 2007

காதல் ஜூரம்-1

(தமிழ் பதிவுலகத்தில் காதல்)

இவன் எழுதும் பதிவுக்கு பின்னூட்டம் விழுந்தது இதுதான் முதன் முறை. இதுவரைக்கு 26 எழுதியாச்சு. யாரும் கண்டுக்கலே. பிராமணீயம், பெரியாரீயம், வெங்காயம், டவுசர் கிழிஞ்சதுன்னு எழுதத் தெரியாதவனுக்கு எவன் பின்னூட்டம் போடுவான். இதையெல்லாம் எழுதனும்னு இவனுக்கு தெரியல.

Anonymous Said..
I like your writing style and your kavithai's. I dunno how to write in tamil. Or else I would have written in Tamil. I have added your blog to my fav. Eagerly waiting for your next poem.


சொந்தப்பேரில் எழுத, இவன் படம் போட்டுக்க விருப்பமில்லாமல், எழுதும் பதிவர்களில் இவனும் ஒருவன். Onsite வந்ததுல இருந்து தமிழ் மேல இவனுக்கு இருக்கிற பற்று அதிகமாக.. அதிகமாக எழுத ஆரம்பிச்ச போதுதான் கவிதை எழுத ஆரம்பிச்சான். அப்புறம் பிலாக் பண்ண ஆரம்பிச்சு உருப்படாத போனவன் இவன். தமிழ் ஆரவாரமே இல்லாத இடம், பணி புரியும் இடத்திலும் ஹிந்தி இப்படி தமிழுக்கு அப்பால் இருக்கிறவங்களுக்குத்தானே தமிழ் மேல இனம்புரியா ஆர்வம் வரும்.

இவன் எழுதும் கவிதையை யாரும் படிப்பதே இல்லை. இதற்கும், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி, பிலாக் குட்டு எல்லா இடத்திலேயும் பதிவை கூட்டி வெச்சு, எல்லா பட்டையயும் போட்டு ஒரு பின்னூட்டமும் வராத நிலையில இப்படி வந்த பின்னூட்டம் வந்ததே பெரிய சந்தோசமா இருந்துச்சு,. பின்னே வந்த மொத பின்னூட்டமே அனானி. ஹ்ம்ம், நடத்துவோம்னு உங்க பின்னூட்டத்துக்கு நன்றின்னு ஒரு பின்னூட்டம் போட்டு எண்ணிக்கையில் இன்னொன்னையும் சேர்த்து தமிழ்மணம் வந்து பார்த்தான். சோத்தாங்கை பக்கம் அவன் இடுகை தெரிஞ்சது. அடுத்த நிமிஷம் இன்னும் பின்னூட்டங்கள் வந்ததா ஜிமெயில் அறிவிப்பான் வந்து சொல்லிட்டு போனார்.

Anonymous Said
You are welcome.


Anonymous Said
"DONT PUBLISH"


Please add my gmail id so that we can chat in this weekend. "digitalwaves@********.com".

அட, நமக்கும் ஒரு ரசிகப் பட்டாளம் போல இருக்கேன்னு நினைச்சுகிட்டு weekend எப்படி என்ஜாய் பண்றதுன்னு பட்டியல் போட ஆரம்பிச்சான் ரகு.

விதி சொன்னது: அடப் பாவி இனிமே உனக்கு வீக் எண்ட் எல்லாமே பதிவுலகம் தான், அதனால கடேசி வாரம் என்ஜாய்!

Oct 9, 2007

நண்பனான சூனியன்


சனி உன்னை பிடிச்சிருக்குன்னு,
தெரு முக்கு ஆசாரி சொன்னாரு!
கேட்க மறுத்தது என்னோட பகுத்தறிவு
அன்னிக்குதான்டா உன்னைப் பார்த்தேன்.

நீ எங்க தெருவுக்கு குடியேறின முதல் நாள்
என்னோட அட்டையாட்டம் ஒட்டிகிட்டே!
என்னோட கடங்கார அட்டையெல்லாம்
என் பேர சொல்லியே தேய்ச்சுகிட்டே!

பாட்டில் ஒப்பன் பண்ணும்போது மட்டும்
உனக்கு எப்படியோ மூக்குல் வேக்குது!
இருக்கிறத எல்லாம் நீயே குடிக்கிறதால
எப்பவுமே எனக்கு மண்டை காயுது.

டீ கடைக்கு நான் போறத
யார் சொல்லாமலும் உனக்கு எப்படி தெரியுது?
காசு குடுக்கிற போது மட்டும் நீ எப்படி
எஸ்கேப் ஆகுறேன்னு எவனுக்கும் தெரியாது.

சம்பள நாள் வந்தா கவர் வருதோ இல்லியோ
ஆபிசுக்கு சிரிச்சுகிட்டே வந்து ஸ்டைலா நிப்பே!
மாசக் கடைசி ஆகி உன்னைத் தேடினா
யார்கிட்டேயும் சொல்லாம ஊரைவிட்டே ஓடிப் போயிருப்பே!

சுனாமி வந்து ஊரை யெல்லாம் தூக்குச்சு
உன்னைமட்டும் எப்படிடா விட்டு வெச்சது?
கழுதைய பார்த்தா யோகமாம், ஊர்ல சொன்னாங்கடா
உன்னைய பார்த்தா என் வாழ்க்கையே சூனியம்டா.

உன் நட்பு வேணுமின்னு யாருடா கேட்டா?
நீ வருவேன்னு தெரிஞசதுன்னா போடுவேன் எங்க வீட்டுக்கு பெரிய "Gate"டா!
சாகும்போது மறக்காம சொல்லி அனுப்புடா
வெக்கிறேன் ஊருக்கெல்லாம் பெரிய ட்ரீட்டா!

Oct 1, 2007

"ச்சிக்" கென்று சிக்காகஸ்

1)


2)
3)
4)

5)

Jul 17, 2007

அப்பா!


நான் நடை பழகும் போது
பல முறை விழுந்து இருக்கிறேன்.
அன்றெல்லாம் என் கால்களுக்கு
உங்கள் கரம் கொண்டு பலம் கொடுத்து
பெருமிதப் பட்டவரே நீங்கள்தான்,
இன்று நெடுந்தொலவில்,
சொந்த காலில் நிற்கும்போதோ
"வேண்டாம் ராஜா!
வந்துருடா, பார்க்காமல் இருக்க முடியல"
என்று தொலைபேசியில் கதறும் போது
என் கால்கள் பலமிழக்கின்றன அப்பா!


தந்தையின் பிறந்த நாளில் கண்ணீரோடு விவசாயி

Jul 11, 2007

பிரிவும் பிரிவின் நிமித்தமும்...

என்னை விட்டு பல நாள் நீ
விலகியிருக்க, தற்காலிகமேயன
அழுதவாறு என்னைத்
தேற்றியது மனம்!
பலநாள் மனம்வென்றது,
இம்முறையும் அதையே சொல்லியது,

ஆனாலும் மெளனமாய்
உள்ளுக்குள் அழுதபடியே!



தினம் ஒரு வதம் செய்கிறேன்
நாட்காட்டியை,
நல்ல காலம் வருமென
ஆறுதல் சொன்னபடி அதுவும் ஆயத்தமாகிறது
அடுத்த வதத்திற்கு!



இருவரிலும் ஜீவனில்லை
எனத் தெரிந்தும்
மண்ணில் தெரித்து சிதறி
என்னைப் பார்த்து ஏளனம் செய்கிறது
தோட்டத்துப் பூக்கள்!


இருமுறை முற்றத்திற்கு வந்து
விசாரித்து விட்டுப் போனது முழுநிலவு,
என் தாடி கண்டதும் சோகம் மறைத்தது,
மேகம் மூடி.


உனக்காகவே
கை கோர்த்து காத்திருக்கிறோம்
நிதமும் புதிதாய்!
நானும், நிலவும்
என் தோட்டத்து பூக்களும்!

Jun 25, 2007

புணர்வென்னும் கலவையில்

சுருக்கமான நெளிவுகளுக்குள்
நீள்கோடாய்
ஒரு முற்றுப்புள்ளி!

இருட்டு வண்ண திரவம்,
வேறொரு நிற கலவை,
கலக்கமாய் பார்வை!

நிகழ்களுக்கிடையே ஓட்டம்,
கனவென்னும் கற்பனை,
சிறையில் அகப்படாத
என் ரோமம்,
தேடித் தேடியே
கலைந்து போகிறேன்
வக்கிரத்தை!

புணர்வென்னும் கலவையில்
ஒருமை காணும் தனிமை!

தொலையத் தொலைய
காண்கிற மாயை,
புகை மண்டலத்தில்
நீர் வேட்கை!
வெதும்புகிறேன் நான்!

மஞ்சள் படுக்கையில்
வெளிச்சம் தேடும் என் பார்வை,
பொய் சொல்லியே
ஏமாற்றுகிறதா
உவமை?

Jun 10, 2007

மனிதம்

தாகம் தணிக்க
அடைத்து வைத்த மாசு நீர்!
ஏழைகளுக்கு நிலமில்லை,
உழுதவனுக்கும் சொந்தமில்லை!

ஒற்றையறையில் காற்றடைத்து
குளிரூட்டி நிதமும் நித்திரை!

ஆகாயத்தை ஓட்டை போட்டு
அண்ணாந்து வேடிக்கை!

ஒற்றைக் குச்சியில் நெருப்படைத்து
புகைவழியே சுகம் தேடி
அலையும் மானிடா!

(ஐம்)பூதங்களையும் சித்திரவதை செய்ய
எப்போதிருந்து பழகினாய்?



பனிமலைஎல்லாம்
கரையும் நேரத்தில்
பனி உறைய வீட்டுக்கு வீடு
குளிர்சாதன பெட்டி!


மரக்காட்டை எரித்து
கான்கிரீட் தோட்டத்தில
துளசி விதைக்கிறாய்!

இயற்கையிலிருந்து விலகி நின்று
விசித்திரத்தை பழகி
பெட்டிதட்டினால்
எல்லாம் வரும் என்று
பகுத்தறிவு பேச
வெட்கமாயில்லை?




பக்கத்துவீட்டு எழவு
தெரியாமல்
வலை அரட்டை நண்பனின்
ஜலதோஷத்திற்காக
கண்ணீரா?


நடுச்சாலையில்
உயிர் துடிக்கும் நேரத்தில்,
வெறுப்பாய் ரத்தம் பார்த்து
செவி அடைத்து
அலுவலகம் போக
கைக்கடிகாரம் பார்க்கிறாயே,


நாளையே நீ துடிக்க
இன்னொருவன்
கடிகாரம் பார்ப்பானே!

உன்னால்,
மனிதனுக்கு சிரச்சேதம்!
இயற்கைக்கு உயிர்ச்சேதம்!

மரித்துப்போனமனிதத்திற்கு
பூச்செண்டு தர
மனதில் மனிதம் விதை,

விருட்சம்கொண்டே
பல விழுதுகள் தாங்கி
நாளைய உலகுக்கு
நீயே ஒரு நல்பாதை!


அன்புடன் குழுமம் நடத்திய இரண்டாம் ஆண்டு இயல் கவிதை போட்டியில் திசைகள் ஆசிரியர் மாலனின் ஊக்கப்பரிசு பெற்ற கவிதை இது

Feb 14, 2007

டேய் காதலா-2


முதன் முறையாக,
ஒரு பகலின் இருட்டில் நாம்.
கையில் பசி தணிக்க பாப்கார்னும்,
சூடு தணிக்க பெஃப்சியும்.
திரையரங்கின் மூலை சீட் நமக்கு
தொந்தரவு செய்ய அருகிலும் யாருமில்லை.
பாப்கார்னை மட்டும்
தின்று விட்டு
எனைத் தின்னாமல்
பத்திரமாய் வீட்டில் விட்டாய்,
நமக்கு முதல் இருட்டே
பகலாய் போனதே!


உன் வீட்டில் யாருமில்லை என்று
அழைத்தாய் என்னை,
சினிமாவை போல்- அன்று
மழை இல்லை, மின்னல் இல்லை,
ஏன் இரவாகக் கூட இல்லை,
இடியும் இடிக்கவில்லை,

நானும் பயந்து வந்து
உன்னை கட்டியணைத்துக் கொள்ளவில்லை.


சே,
சினிமாவில் காட்டுவதெல்லாம்
பொய்யென்று நினைத்தேன்
ஆனாலும் சினிமாவில் காட்டாத
காட்சியெல்லாம் அரங்கேறியது,


சீ, சீ!
சினிமா அப்படியொன்றும் பொய் இல்லை!


உன் முதல் மாத சம்பளம்
ஒரு தோடும், பொட்டும்,
100 ரூபாயும் குடுத்தாய்.
நீ வாங்கிய பைக்கில்
என்னைத்தான் அமர்த்திப்பார்த்தாக
வேண்டும் என்று அடம் உனக்கு.
முக்காடு போட்டபடி உன்னைத் தொடாமல்
ரோட்டி ஊர்ந்தபடி நானும், பைக்கும்.
தோடும், பொட்டும், பணமும்
பத்திரமாய் பையில்,
மனம் மட்டும வானத்தில்!



டிராபிக் சிக்னல்,
இறுக்கி அணைத்த படி
முன் வண்டியில்
இளம் தம்பதி!
வயிறு எரிந்தது எனக்கு.
சீக்கிரமே,
என்னை கல்யாணம் பண்ணுடா,
ஆயிரம் பேரயாவது
வயிறு எரிய வெக்கிறேன்.





நீ சிகரெட் பிடிக்கும் போதெல்லாம்
பிடிங்கி வைத்துக்கொண்ட சிகரெட்டுகள்
பெட்டி வழிய என் அறையில்.
அவற்றை பிடிக்கவாவது என் அறைக்கு
யாருக்கும் தெரியாமல் வந்து போடா!







"காதலர் தினத்துக்கு என்ன தருவாய்?"
என்று கேட்டேன்,
"என்னைத்தரவா?" என்றாய்,
எதற்கு? உன்னைக் கொடுத்து
"என்னை எடுத்துக் கொள்வாய்,
அப்படியே கொல்லவும் செய்வாய்.
"அப்போ உன்னை பார்க்க
வர மாட்டேன் என்றாய்".
"பரிமாற்றம், நாளை மட்டும்" என்றேன்,
ஆயிரமாவது தடவையாக.

Jan 15, 2007

பொங்கலுக்கும் பசிக்குதே





ஊரெல்லாம் கும்மாளம்,
புதுத்துணி, உதட்டுல் புன்னகை,
தெருவெங்கும் பொங்கல் பொங்குது!
பசி வந்த எந்தம்பி மட்டும்
அழும் குரலோடு.




"நல்ல நாள் அதுவுமாய் வந்துட்டியே"
விரட்டியது குண்டம்மா.

இந்த பொங்கல் நாளிலாவது
பசிக்கத் தெரியாமல்
இருந்திருக்கக் கூடாதா?


தியேட்டர் வாசலில் பெரும் கூட்டம்
3 நாளா 10 பேர் அலங்காரம் செய்ய
100 அடி உசரத்துல ஒரு நடிகர்.





குடம் குடமாய் பாலாபிசேகம்...
ஒரு தம்ளருல குடுங்கய்யா
தம்பி வயிறாவது நனையட்டும்.

ஊரெல்லாம் கும்மாளம்,
புதுத்துணி,
உதட்டுல் புன்னகை,
தெருவெங்கும் பொங்கல் பொங்குது!

பசியோட திரும்பவும் தம்பி அழ,
கையேந்தி ஆரம்பிச்சேன்
"அம்மா தாயே.."

பட உதவி-நன்றி-தினமலர்