Jun 10, 2007

மனிதம்

தாகம் தணிக்க
அடைத்து வைத்த மாசு நீர்!
ஏழைகளுக்கு நிலமில்லை,
உழுதவனுக்கும் சொந்தமில்லை!

ஒற்றையறையில் காற்றடைத்து
குளிரூட்டி நிதமும் நித்திரை!

ஆகாயத்தை ஓட்டை போட்டு
அண்ணாந்து வேடிக்கை!

ஒற்றைக் குச்சியில் நெருப்படைத்து
புகைவழியே சுகம் தேடி
அலையும் மானிடா!

(ஐம்)பூதங்களையும் சித்திரவதை செய்ய
எப்போதிருந்து பழகினாய்?



பனிமலைஎல்லாம்
கரையும் நேரத்தில்
பனி உறைய வீட்டுக்கு வீடு
குளிர்சாதன பெட்டி!


மரக்காட்டை எரித்து
கான்கிரீட் தோட்டத்தில
துளசி விதைக்கிறாய்!

இயற்கையிலிருந்து விலகி நின்று
விசித்திரத்தை பழகி
பெட்டிதட்டினால்
எல்லாம் வரும் என்று
பகுத்தறிவு பேச
வெட்கமாயில்லை?




பக்கத்துவீட்டு எழவு
தெரியாமல்
வலை அரட்டை நண்பனின்
ஜலதோஷத்திற்காக
கண்ணீரா?


நடுச்சாலையில்
உயிர் துடிக்கும் நேரத்தில்,
வெறுப்பாய் ரத்தம் பார்த்து
செவி அடைத்து
அலுவலகம் போக
கைக்கடிகாரம் பார்க்கிறாயே,


நாளையே நீ துடிக்க
இன்னொருவன்
கடிகாரம் பார்ப்பானே!

உன்னால்,
மனிதனுக்கு சிரச்சேதம்!
இயற்கைக்கு உயிர்ச்சேதம்!

மரித்துப்போனமனிதத்திற்கு
பூச்செண்டு தர
மனதில் மனிதம் விதை,

விருட்சம்கொண்டே
பல விழுதுகள் தாங்கி
நாளைய உலகுக்கு
நீயே ஒரு நல்பாதை!


அன்புடன் குழுமம் நடத்திய இரண்டாம் ஆண்டு இயல் கவிதை போட்டியில் திசைகள் ஆசிரியர் மாலனின் ஊக்கப்பரிசு பெற்ற கவிதை இது

7 விதை(கள்):

சேதுக்கரசி said...

நடுவர் மாலனின் ஊக்கப்பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் இளா!

G.Ragavan said...

வாழ்த்துகள். மிக அருமையாக வந்திருக்கிறது. ஊக்கப்பரிசு பொருத்தந்தான்.

அனுசுயா said...

//பக்கத்துவீட்டு எழவு
தெரியாமல்
வலை அரட்டை நண்பனின்
ஜலதோஷத்திற்காக
கண்ணீரா?//

நல்ல சரியான கருத்து :)

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் இளா....

மனிதம் வளர்ப்போம்.

ILA (a) இளா said...

சேதுக்கரசி- நன்றிங்க
ஜி.ரா - :)

அனு - உண்மைய சொன்னா அது ஆங்கிலத்தில் 1999ல் வந்த ஒரு கருத்து. தமிழுக்கும் எழவுக்கும் நான் மாற்றிவிட்டேன்.

Anonymous said...

//பக்கத்துவீட்டு எழவு
தெரியாமல்
வலை அரட்டை நண்பனின்
ஜலதோஷத்திற்காக
கண்ணீரா?//
சரியான வார்த்தை, நிதர்சனமும் கூட. போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்

மங்கை said...

மனித்தையும் இயற்கையையும் வளர்க்க மறந்துவிட்டோம்னு அழகா சொல்லி இருக்கீங்க..நல்லா இருக்கு இளா