Jun 30, 2009

ஆணிவேர்

எனக்கு சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. என் தந்தை சிங்கப்பூர் வந்தவுடன் என் சித்தப்பாவும் பங்காளிகளும் வேலை தேடி பட்டணம் போய்விட்டதாக கேள்வி. தாத்தா பாட்டி என யாருமே எனக்கு நினைவில் இல்லை. நான் பிறப்பதற்கு முன்னமேயே அவர்கள் இறந்துவிட்டிருந்தார்கள். எங்கள் குடும்பமும் விவசாய குடும்பம்தானாம், அப்பா சொல்லித்தான் தெரியும். நன்றாக படிக்கும் எனக்கு வயது 17. பந்துக்கள் பலர் இருந்தும் சொல்லிக்கொள்ள சொந்தம் என்று யாருமில்லை என்கிற சோகம் எனக்கு நிறையவே உண்டு.மாமா, அத்தை, சித்தப்பா சித்தி எல்லாம் படித்து கேட்டதோடு சரி. உறவுகள் இல்லாமல் இருப்பதும் ஒரு அநாதை போன்ற ஒரு உணர்வு வர, அப்பாவிடம் கேட்டேன்.

"அப்பா, நமக்கு சொந்தம்னு யாருமே இல்லையா?"

"இருக்காங்கப்பா, பங்காளி வழியில நெறைய சொந்தம் இருக்காங்க. ஒரு தலைமுறை போனவுடன் அவுங்க புள்ளைங்க எல்லாம் பழைய சொந்தங்களை தேடறதுமில்லே, பழகறதும் இல்லே. அவுங்க அவுங்க அவுங்களுக்கு வசதியான மக்களோட பழக ஆரம்பிச்சிறாங்க. ஏதாவது விசேசம்னா மட்டும் வந்து போயிட்டு இருந்தாங்க, அப்புறம் ஏதோ காரணம் சொல்லி வராம போக, தொடர்பில்லாமப் போச்சு. எதுக்கு கேக்குற?"

"இல்லே, எனக்கு நம்ம சொந்தங்களைப் பார்க்கனும் போல இருக்கு"

தூக்கி வாரிப்போட்டது அப்பாவுக்கு? ஏன், எபப்டின்னு கேட்காம, "சரி, உன் விருப்பம் போல செய்?"னாரு.

முதல்ல இருந்த சொந்தத்தை கேட்டேன், அப்பா சொன்ன யாருமே அந்தந்த முகவரியில இல்லே. முகவரியே மாறும்போது கூப்பிடறதுக்கு தொலைபேசி மட்டும் கிடைச்சுருமா என்ன? அப்பாவுக்கு தெரிஞ்ச ஒரே சொந்தம், கண்ணுப்பையன் சித்தப்பா மட்டும்தான். அப்பாதான் பேசினாரு. அவுங்க பையனும் புள்ளையும் அமெரிக்காவுல இருக்காங்களாம். அவுங்க நம்பரை மட்டும் வாங்கித்தந்தாங்க. என்ன பேசறதுன்னு தெரியாம அவுங்கள கூப்பிட்டேன்.

"நான் ராஜா, செல்லிக்காட்டு பெரியண்ணன் பேரன்..." அப்படின்னு ஆரம்பிச்சு, என்ன மொதல்ல அறிமுகம் பண்ணிக்கிட்டேன். சுரத்தில்லாம பதில் வந்துச்சு..சரி அதுக்கென்ன இப்போங்கிற மாதிரி பேசி வெச்சுட்டாங்க. அன்னிக்கு ராத்திரி முழுசும் அழுது தீர்த்தேன். அவ்வளவுதானா சொந்தம்? இதே நானும் அமெரிக்காவுல இருந்திருந்தா, இப்படி பேசி இருப்பாங்களா? எனக்கு என்ன கொறைச்சல்? இப்படி பல கேள்விங்களோட விடியற்காலையில் தூங்கிப்போனேன். காலையில அப்பா எழுப்பி சேலத்துல இருந்தே ரமேஷ் பேசுறதா சொன்னாரு.

"என்னப்பா,யாரு என்னான்னெ தெரியாம என்ன பேசறது?"

"நேத்து நீ கண்ணுப்பையன் பையனோட பேசுனியே அப்போ மட்டும் தெரிஞ்சுதா?"

சவுக்கடி மாதிரி இருந்துச்சு அப்பா கேட்டது.

ரமேஷ் கிட்ட பேச ஆரம்பிச்சேன். எங்கயோ ஒரு நுனி சொந்தம் அது. ரொம்ப்ப ரொம்ப தூரம்னு கூட சொல்ல தெரியாத ஒரு சொந்தம். நல்ல நிலைமையில இருக்கிறான் போல, என்ன விட மூணு வயசு பெரியவன். நிறைய பேசினோம், சம்பந்தமே இல்லாம. சினிமா, அரசியல், சிங்கப்பூர் வாழக்கை, என்னோட பள்ளி, புடிச்ச PS3, அவனுக்கு புடிச்ச சாப்பாடு, மணிக்கணக்குல பேசினோம். அப்புறம் ரெண்டு பேருமே சேர்ந்து சொந்தத்தை தேடற நிலைக்கு வந்துட்டோம். அப்பாகிட்டே மூணு மாசம் இந்தியா போறேன்னு சொன்னேன். அப்பாவுக்கோ இதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்லே. ஆனா என்னோட விருப்பம் ஜெயிச்சது.

இந்தியா....

ரமேஷுக்கு அப்பா இல்லே, அம்மா மட்டும்தான்.மளிகை கடை நடத்துறாங்க. கொஞ்சம் வசதியான வீடு, அவுங்க அம்மா உழைப்பு தெரிஞ்சது. ரமேஷுக்கு காலேஜ் விட்டா கடை. அவன் உலகம் அவ்வளவுதான். கொண்டலாம்பட்டி பை-பாஸ்ல தம் போட்டுட்டு, ஏற்காட்டுல டீ சாப்புடறதுன்னு ஒரு புது வாழ்க்கை. எனக்கு ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு.

ரமேஷ் செம கில்லாடி.அவன் மொதல்ல என்னை கூட்டிக்கொண்டு போனது குலதெயவம் கோயிலுக்கு. பண்டாரத்துக்கு தாத்தாவைத் நல்லா தெரிந்திருந்து வைத்திருந்தான்.

"தாத்தா, எங்க சொந்தக்காரவங்க யாராவது போன விசேசத்துக்கு காசு குடுத்தாங்களா?" ரமேஷ்.

"அட யார்ரா இவன் கூறுகெட்டவன். யாரு குடுக்காம போறாங்க? உங்க பெரிய மாமன் கூட, அதாண்டா நாமக்கல்ல லாரி பட்டறை வெச்சிருக்காருல்ல.. அவரு கூட மூணு லட்ச ரூவா குடுத்தாரு"

"அவுங்க போன் நம்பரு குடு தாத்தா. பேசோனும்'

"ஏன் உம்மாமன் உன்கிட்ட பேசறது இல்லையா"

"அதெல்லாம் உனக்கெதுக்கு நம்பர குடு நாம்பேசிக்கிறேன்"

இப்படி ஒவ்வொரு அடையாளத்தையும் பிடித்தோம்.

மொத்தம் 13 மாமா, 8 அத்தை, 7 சித்தப்பாக்கள், அவர்கள் வழி வந்த சொந்தங்கள் என 500 பேருக்குமேலேயே சொந்தங்களின் எண்ணிக்கை வந்தது. ஒருவருக்கும் என்னை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. காரணம் என் தந்தை விட்டுவந்த தொலைவு. உறவுகள் தொலைய வெளிநாட்டிற்குச் செல்லும், சொல்லும் எல்லாம் காரணங்களும் எனக்கும் இருந்தது. எல்லார் வீட்டுக்கும் பேசினோம், சென்றோம்.

எடப்பாடி முருகேசன் மாமா, என்னை ரொம்பவே கவர்ந்தார். ஆட்டோ ஒட்டுகிறார், ஊரில் அவருக்குத் தெரியாத மனிதர்களும் இல்லை, சந்து பொந்துகளும் இல்லை. வசதி குறைந்தவரான அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 45 வயசு மட்டுமே ஆகியிருந்தது.

"மாமா, நான் நம்ம ஊருக்கு போலாம்னு இருக்கேன்"

"எந்த ஊருக்குடா? சிங்கப்பூருக்கா? பின்னே இங்கேவா இருக்கப்போறே?"

"இல்ல மாமா, கொழிஞ்சிக்காட்டூருக்கு"

ஐந்து நிமிடம் மாமா ஒன்றுமே சொல்லவில்லை. பிறகு "உனக்கு யாரத்தெரியும்னு அங்கேப் போற? நம்ம காட்டை எல்லாம் வித்தாச்சு, ஊருக்குள்ள சொந்தம்னு சொல்லிக்க ஒரு பய இல்லே. அப்புறம் என்ன வேலை. வந்தமா நம்ம கூட கொஞ்ச நாள் இருந்தோமான்னு இருப்பியா அத வுட்டுப்புட்டு"

என்னுடைய வழக்கமான இருக்கம், பிடிவாதம் அங்கேயும் வென்றது. மாமா, நான், ரமேஷ் மூவரும் ஒரு நாள் என் கிராமத்துக்கு போக நாள் குறித்தாயிற்று.

அந்த நாள்..

மாமா ஏற்பாடு செய்திருந்த காரில் சென்றோம்.

"ராஜா, எங்கேடா போறது? அங்கே போயி என்னத்த பார்ப்பே? "

"போவோம் மாமா, தாத்தா பாட்டி இருந்த இடத்தை பார்ப்போம்"

"பார்த்து?"

பதில் தெரியாத கேள்வி. பார்த்து என்ன செய்யப் போகிறேன்? நான் படித்த பழைய பள்ளிக்கூடத்தை பார்க்கும் போதும், பழைய புத்தகத்தினை பார்க்கும் போதும், என் சிறுவயது நணபனைப் பார்க்கும் போதும் மனதுக்குள் இனம் தெரியாத ஒரு வெறுமை வரும். அது என்னவென சொல்ல முடியாத ஒரு இனம் புரியாத உணர்வு. சோகமே மிகுதியாய் தோன்றும். அது போலவே இதுவும் இருக்கும்.

"என்னடா பதிலே சொல்ல மாட்டேங்குற, சுடுகாட்ட பார்க்கவா அங்கே இருந்து வந்த?"

"மாமா, உங்களுக்கு எல்லாம் சொந்தம் பந்தம் கூட இருக்கன்னு ஆசை இல்லியா?"

"அடப்போடா, கல்யாணம் ஆகியிருந்தாலாவது பொண்டாட்டிங்கிற சொந்தம் வந்து இருக்கும். நமக்கு அதுவும் குடுப்பினை இல்லே"

"இல்லே மாமா, ஒரு விசேசம், எழவுன்னா கூட நம்ம சொந்தத்துக்கு தெரியாது. இதுக்கூட சொந்தம் இல்லாட்டா என்னாத்துக்கு?"

"ஏன் சொந்தக்காரன் வந்தாத்தான் பொணம் எரியுமா?" சத்தமாக சிரித்தார். "சொந்தமெல்லாம்ம்ம்... கூட இருந்தாத்தான். உனக்கும் எனக்கும் பொழப்புதான் முக்கியம். ஒரு ஜான் வயித்துக்குன்னு சொல்லிகிட்டு நாம தொலக்கிறது நெறைய அதுல மொதல்ல போறதே சொந்தந்தான்"

காசாங்காடு ஊராட்சி உங்களை வரவேற்கிறது. சிமெண்டினால் ஆனா அழுக்கேறிய பலகை. என் கிராமம். என் தாத்தன் பாட்டி, முப்பாட்டன் வாழ்ந்த இடம், முதன் முறையாய் பொதுவில் அழுதேன். காரணம் தெரியவில்லை.

"டே, இங்க பாரு? இந்த மயித்துக்குதான் வரவேணாம்னு சொன்னாரு மாமா. கேக்குறியா. என்னாத்துக்கு அழுவுற என்ன இருக்குன்னு சொல்லு?"

"என்னமோ தெரியலடா, சொந்தம் இல்லாம வளர்ந்த எனக்கு இது எல்லாம் புதுசா இருக்கு"

டீ கடை ஒன்று இருந்தது. மாமாதான் போய் விசாரித்து விட்டு வந்தார்.

"சொந்த ஊருல என்ன மாமா விசாரிச்சிகிட்டு"

"இல்லடா, நானும் சின்ன வயசுல இங்கே இருந்துப்போயிட்டேனா. அதான். மொதல்ல ஒத்தயடிதான் இருந்திச்சு. இப்போ ரோடெல்லாம் போட்டிருக்காங்க. அதான் நம்ம காட்டுக்கு எப்படி போறதுன்னு கேட்டேன். ஊருல இப்போ 10 இல்லைன்னா 15 பேர்தான் இருக்காங்களாம். மீதி எல்லாம் பொழப்ப தேடி நம்மள மாதிரியே வெளியூருக்குப் போயிட்டாங்களாம்"

போற வழியில் ஊரைப் பார்த்தேன் பொட்டல் காடு. ஒரு வசதியும் இல்லாமல் இருந்தது.
எப்படியோ உச்சி வெயில் நேரத்திற்கு தாத்தா இருந்த வீட்டிற்கு வந்தோம். இடிந்து சிதிலமாகி இருந்தது. கொஞ்சமாய் மண் திட்டு மட்டுமே இருந்தது. மீதி இருக்கும் என் பாரம்பரியம், என் பாரம்பரிய சொத்து, என் பூர்வீகம். மழை நீரிலும், வெய்யிலிலும் கவனிப்பாரற்று கிடந்த வீடு போல. மனதில் எதுவுமே தோன்றவில்லை. ஏதோ பொருட்காட்சிய பார்ப்பது போல் பார்த்துகொண்டிருந்தேன். ரமேஷ் யார் கூடவோ தூரமாய் இருந்த மேட்டின் மீது ஏறி தன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தான். தாத்தாவையும் பாட்டியையும் புதைத்த இடத்தை தேடி அலைந்தோம். கடைசியாய் ஒரு பெரியவர் வழி சொன்னார். அவரும் ஒரு கேள்வி கேட்டார் "என்னாத்துக்கு தேடுறீங்க. ஏதாவது புதையல் கிதையலா?"

சிரித்தபடியே போனோம். புதைத்த இடம் அடையாளம் தெரியாத அளவுக்கு பள்ளமாய் இருந்தது. ஐந்து நிமிடம் மெளனமாய் இருந்தேன். ரமேஷ் மட்டும் என் கூட இருந்தான். மாமா எங்கோ பார்த்தபடி சிகரெட் பிடித்தபடி இருந்தார். சரி, அவருக்கும் என் தாத்தாவுக்கும் தூரத்து சொந்தம்தானே. ஊரை விட்டு மெயின் ரோட்டிற்கு வரும்பொழுது இருட்டத்தொடங்கி இருந்தது.

தூரமாய் ஒரு வேப்பம் மரம் தெரிந்தது, குருவிகளின் கீச்சுக்குரல்கள் கேட்டது, வேப்பம் பழங்கள் காற்றில் அசைந்து விழுந்தன, ஆடியது இலைகள், கீழே விழுந்த பழங்களை பொறுக்கிக்கொண்டிருந்தாள்
ஒரு நரைக்கிழவி! நாளை எப்படியும் சந்தையில் விற்றுவிடுவாள்,ஏதோ ஒரு ஊரில் மீண்டும் ஒரு மரம் வளரும், மீண்டும் பழங்கள் பழுத்து கீழே விழும்.

Nov 8, 2008

ராமனைத் தேடும் தமிழர்கள்

தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது
இராமாயணம்.
இராவணன் உருவில்
பக்க்ஷே இருக்க
ராமனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
தமிழர்கள்

Oct 26, 2008

தங்கைக்கோர் வாழ்த்து!






Sep 18, 2008

காதல் ஜூரம்-2

என்ன கொடுமை தெரியுங்களா என்னோட இந்தக் கதையின் கதாநாயகியை மாதிரியே பொசுக்குன்னு ஒரு பதிவர் வந்துட்டாங்க. அதான் இந்த இடைவெளி(ஒரு வருசமா?).


ஒரு முகம் தெரியா பெண்ணின் அனானி மறுமொழி கிடைச்சதும் சந்தோசம் தாங்கல. அப்புறம் ஒரு சந்தேகம் வந்துருச்சு ஒரு வேலை ராயலை சிங்கமெல்லாம் சேர்ந்து ரவுண்ட் கட்டின கதை மாதிரி ஆகிருமோன்னு ஒரு 'பல்பு'ம் எரிஞ்சது. எதுக்கும் இருக்கட்டும்னு அந்த ID ஜிடாக்ல சேர்த்துட்டு........

எல்லாரும் கண்டிப்பா மொத பகுதிய மறந்திருப்பீங்க, அதனால ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்துருங்க.(Click here)





Onsite வந்துட்டா மட்டும் நமக்கு எங்கிருந்தோ மொழி மேல அப்படி ஒரு வெறி வந்துரும். காரணம் வேற ஒன்னும் இல்லீங், வெள்ளையும் கருப்பையும் பார்த்து பார்த்து, அவங்க என்ன பேசறாங்கன்னு தெரியாம உதட்டையே உத்து உத்து பார்த்து, பாதி அர்த்தம் புரிஞ்சி, மீதிக்கு நாமே fill in the blanks பண்ணினா வரத்தானே செய்யும். ரகுவுக்கும் அப்படித்தான் வந்துச்சு. தமிழார்வம். அதனாலயே நெறைய படிச்சு, blogs எழுத ஆரம்பிச்சான்.

வாரக் கடேசிக்கு எங்கே போலாம்னு யோசனை பண்ணினான். ஒரு பட்டியலே போட்டான் ரகு.



  • பாலா வீட்டுக்கு போயி அவனுக்கு ஒரு சலாம் போட்டு ”பகுன்னாரா?” அப்படின்னு அவன் வூட்டுக்காரம்மாகிட்ட கேட்டாவே உச்சில முடி நிக்கிற மாதிரி காரமா கோழிச் சாப்பாடு கிடைக்கும்.

  • விஜிய இங்கே கூப்பிட்டு ரெண்டு படத்த பார்த்துட்டே, கரோனாவை(பீர்) தள்ளி flat ஆகலாம்.

  • வடக்கத்து ஜிகிட்டுக்கு போனப் போட்டு “அயாம் ஃபைன் யார்? யூ கம் ஹியர்னா” அப்படின்னு குச் குச் ஹோத்தா பண்ணலாம். ஆனா ரெண்டு நாளைக்கு வழிய முடியாதே... அதுக்காக ஞாயித்துக்கிழமை செம தூக்கம் போடனும்.

இப்படி பட்டியல வெவரமா வேகமா போட்டுட்டு இருக்கும் போது “டொங்க்”. எவனோ ஜிடாக்ல கூப்பிடறான்னு நினைச்சுகிட்டே போனா பூ படம் போட்டு தெரியாத பேர்ல சேட்ல ஒரு ஆளு. ஒரு வேளை பேர மாத்தி விளையாடுற வ.வா.ச மக்களா இருப்பாங்களான்னு கூட நினைச்சான்.

"Hi, How are You?" அப்படின்னு முதல் வரி.

ID பார்த்தான் ”traehteews_sruoy”. என்ன எழவுடா இது. ஏதோ ஒன்ன விக்க வர பொம்பளைங்க ID மாதிரியே இருக்கு. சரி நமக்கும் நேரம் போவலை என்ன நடக்கும்னு பார்க்கலாம்.

“I am fine, whatzup"

"This is my New ID, whn is your next blog" ஆஹா அதுவா இது. தூள்டா.

"In a day. What is your name? where are you from? how did u get my blog? do you like it? ho..."

"ஹல்லோ நிறுத்துங்க, எதுக்கு இத்தனை கேள்வி? என் பேரு ராஜி, உங்க பாஷையில் சொன்னா புதரகம்தான். உங்களை மாதிரி Onsite எல்லாம் வரலை. இந்தியாவுல பொறந்து, இங்கே படிக்க வந்தேன். அப்படியே வேலை தேடி, செட்டிலாகிட்டு இருக்கேன். இப்போ உங்க ஊருக்குப் பக்கம்தான். போதுமா? உங்களைப் பத்தி நானும் விசாரிச்சுட்டேன். Tamil ப்லொக் எழுதறவங்களை விசாரிக்கிறது கஷ்டமா என்ன? உங்கள பத்தி விவரத்தை நாஞ்சொல்லவா?”

”ஆஹா. இவ்வளவு தூரம் ஆகிப்போயிருச்சா? சரிங்க உங்க நம்பர் கொடுங்க. கூப்பிடறேன்”.


“அதுக்குள்ளேயே சந்தேகமா? நான் பொண்ணுதான். கலாய்க்க எல்லாம் இல்லீங்க. உங்க புரொபல் பார்த்தேன், பக்கத்து ஊர்தான்னு தெரிஞ்சு போயிருச்சு. அதான் சேட்டிங். எப்படியும் வாரக் கடேசி சும்மாதானே இருப்பீங்க. மொக்கைப் போட ஆள் இல்லைன்னு கவலைப்பட வேணாம். நான் சேட்டுவேன், நாள் முழுக்க”

“சரி நீங்க பதிவ படிக்கிறீங்களே. நீங்க பதிவெல்லாம் எழுதுவீங்களா?”

“ஓ எழுதுவேனே. ஆனா வேற பேர்ல. உங்களால கண்டுபிடிக்க முடியாது”

“அடச்சொல்லுங்க”


“நீங்க கண்டிப்பா படிச்சிருப்பீங்க”

“அப்படியா. அப்போ தெரிஞ்ச முகம்தான்னு சொல்லுங்க”

“படிச்சா அதிர்ச்சியாகிர மாட்டீங்களே”

இருதயத்துடிப்பு அதிகமாக ஆச்சு “என்னாங்க, நக்கலா. பதிவச் சொல்லுங்க, நான் நீங்க யாருன்னு சொல்லுறேன். பதிவெல்லாம் கம்மியாத்தான் போட்டிருக்கேன். ஆனா எல்லாப் பதிவர்களையும் தெரியும். 80 பேர்க்குமேல சேட்டுல சேர்த்து வெச்சிருக்கேன். தெரியுங்களா?”

”பதிவோட பேர அப்புறம் சொல்றேன். இப்போ கூப்பிடுங்க” எண் திரையில வந்து விழுந்துச்சு.

“9 மணிக்கு மேல கூப்பிடறேனே, இன்னும் 45 நிமிஷம்தானே இருக்கு”

“ஓஹ், free minutesக்காகவா? சரி கூப்பிடுங்க”

மனசு 45 நிமிசத்துக்கெல்லாம் காத்திருக்க மாட்டேன்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சது. தொடர்ச்சியான 3 வது தம்ம அடிக்கும் போதுதான் ஒரு கேள்வி வந்துச்சு.


”லவ்வு வந்துருச்சா?” பொண்ணு சேட் பண்ணினாவே லவ்வுன்னு நினைக்கிற அளவுக்கு இருக்கிற சாதாரண பையன் நம்ம ரகு இல்லேன்னா கூட, அவனும் பையந்தானே.

9 மணி ஆனவுடன் எண்ணைத் தட்டினான். ஒரு ரிங்லேயே ”சொல்லுங்க ரகு”ன்னு ஒரு வீணை பேசிச்சு. அசடு வழிஞ்சே 30 நிமிஷம் பேசினான் ரகு. வழக்கமான விசாரிப்பு முடிஞ்சு, வழக்கமான குடும்ப கதை முடிஞ்சு, என்ன சமைக்கத்தெரியும் பேசி, சத்யம், குசேலன், தசாதவதாரம் ஆரம்பிச்சி ஒரு படம் விடாம, புடிச்ச சீன், புடிக்காத பாட்டு அப்படின்னு அபூர்வ சகோதரர்கள் வரும் போது மணி 3:20.

ரெண்டு பேருக்கும் மனசே இல்லாம தூங்கப் போனாங்க. ஆனா ரகு தூங்கல.

காலையில 6:10 மணிக்கு மணி அடிச்சது.

“தூக்கமே வரலேடா. நீ தூங்குனியா?” முதன் முறையா டா போட்டு பேசினாள். போன்ல பேசிகிட்டே காபி முடிஞ்சு, உச்சா போயி, ஆயி போயி 9 மணி வரைக்கும் போச்சு. அன்னிக்கு நல்லா தூங்கல ஆனா ராத்திரி 10 மணிக்கே போன் பேசுறத நிறுத்திட்டாங்க. இப்படியே சனிக்கிழமை, போனும்,. சேட்டும்னு ஓடிப்போக, ஏதோ ஒன்னு ரெண்டு பேர் மனசிலேயும் ஓடி வந்து உக்காந்துகிச்சு.

ஞாயிறு, காலை 7:20 மணிக்கு.

”டொங்க்”

“ஹேய் உன்னோட பதிவென்னென்னு சொல்லவே இல்லியே”

”சொன்னா சிரிப்பேடா. வேணாம்”

“அடச்சொல்லுன்னா”


“உன்ன மாதிரி எல்லாம் கவிதை எல்லாம் எனக்கு வராது”

”அப்போ என்னோடது எல்லாம் கவிதங்கிறியா?”


”பின்னே? நீ கவிஜன். நான் மனசில பட்டத எழுதறவ”, ஆர்வத்தைத் தூண்டிக்கிட்டே போனா.


“சொல்றியா? இல்லாட்டி போவட்டுமா?”


”சொல்றேன், சொல்றேன்”



”டொங்க்” பதிவோட முகவரி வந்துச்சு.



“பகுத்தறிவாளர்கள் வாழ்க” அப்படின்னு பெரியாரைப் புகழ்ந்தும், பிராமிணர்களைச்சாடியும், அதேசமயம் செம நாகரிகமா எழுற ஒரு ஆம்பளைப் பதிவரின் பதிவு அது.

“எதுக்குடி இதத்தர்றே. இத நான் படிக்கிறது இல்லே”

“நாந்தான் இத எழுதறேன், நம்பலைன்னா ஒரு பின்னூட்டம் போடு. நான் வெளியிடறேன்.”

ஒரு பதிவுக்கு “நல்ல பதிவு" அப்படின்னு பின்னூட்டம் போட்டான். “போட்டாச்சு”


“இப்போ பாருடா” பின்னூட்டம் வெளியாகிருந்தது.

மனசுக்குள்ளே ஏதோ இனம் புரியாத கிலி வந்துச்சு. எப்போ பார்த்தாலும், தினமலர், பாஜக, பிராமிணர்கள்ன்னு தாக்கு தாக்குன்னு தாக்கி, எப்பவுமே சூடா இருக்கிற பதிவு அது. பாதி பேருக்கு மேல அந்தப் பதிவர் மேல செம காண்டுல இருந்தாங்க. எல்லாரும் ஆம்பிளைன்னு நினைச்சு இருக்க ”இது ஒரு பொண்ணா?”.

“என்னடா சத்தத்தையே காணோம்”

“அதிர்ச்சியா இருக்கு”

“ஏன்?இந்தப் பதிவ எழுதறது ஒரு பொண்ணான்னுதானேன்னா? நாந்தான் எழுதறேன். ஏன் எழுதக்கூடாதா?”

“எழுதலாம். தப்பே இல்லே”

“அப்புறம்?”

“ “

“என்ன சத்தத்தையே காணோம்”


“டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்”

”என்னத்தைப் பேசச்சொல்றே” என்றான் பூணூலை அழுத்தி பிடித்தப்படி...


விதி: காதலுக்கு, அவா வீடு, பெரியவா வீடுன்னெல்லாம் தெரியாது.

Aug 21, 2008

கொழிஞ்சிக்காட்டூரும் ஆஸ்காரும்

கொழிஞ்சிக்காட்டூர் முழுக்க ஒரே பேச்சு. அது காளியம்மாள் மகன் செந்தில்குமார் ஆஸ்கார் விருது வாங்கப் போகிறார் என்பதே. காடு, மேடு, கழனி, ஆடு மேய்க்கிறவங்கள்ல ஆரம்பிச்சு இதைப்பத்தியே பேச்சு எங்கே பார்த்தாலும். அந்த ஊர் சங்ககிரியிலிருந்து 16 மைல் தள்ளி இருந்தது. டவுன் பஸ் மட்டுமே நிற்கும், அதுவும் மேட்டுக்கடையில்தான். அங்கே இருந்து 3 கிலோமீட்டர் உள்ளே இருக்கு கொழிஞ்சிக்காட்டூர்.

அந்த கிராமத்துல பொறந்து காலேஜ் வரைக்கும் படிச்சவர் செந்தில். படிச்ச BA-Economicsக்கு வேலை கிடைக்காததால ஊரிலே இருக்கிற 3 ஏக்கர் மேக்காடை 2 வருஷமா உழுது அதுவும் வயித்துக்கு, மனசுக்கு பத்தாதால சென்னையில சினிமா டைரக்டர் ஆவனும்னு ஆவலோட பஸ் ஏறின செந்திலபத்தி இப்போதான் ஊர் மக்களுக்கு தெரிய வந்து இருக்கு. அவர் நண்பன் சின்னகண்ணுக்கும், அவுங்க அம்மாவுக்கு மட்டுந்தான் தெரியும் இந்த 3 வருஷத்துல என்ன நடந்துச்சுன்னு. போன வருஷம் மாரியம்மன் பொங்கலுக்கு கூட வரலை.

மணி ராத்திர் 7, ஊர்க்கவுண்டர் வீட்டுக்கு முன்னாடி ஊர்சனம் மொத்தமும் காத்து இருந்தது. அவரு வீட்டுல மட்டுந்தான் குடை வெச்சு ஸ்டார் டிவி வரும். பஞ்சாயத்து டி.வில இன்னும் பொதிகைதானே. ஊர்கவுண்டர் பையன் சின்னகண்ணு, அவர்தான் செந்தில் கூட நெருக்கம். அதுவுமில்லாம அவர்கிட்டேதான் செந்திலு அடிக்கடி பேசிக்குவாராம்.

"செந்திலு, ஒரு சினிமா எடுத்து இருக்காப்ல. அதுக்கு பேரு Documentary. சின்னப்படம்னு சொல்லலாம். அந்தப்போட்டிக்கு உலகத்துல இருந்து மொத்தம் 358 படம் வந்துருக்கு அதுல நல்லதா 5 படத்தை கடேசி ரவுண்ட் வரைக்கு வந்து இருக்கு. அதுல நம்ம செந்திலுதும் ஒன்னு. காளியம்மா இது வரைக்கும் பட்ட கஷ்டத்துக்கு இன்னிக்கே விடிவு காலம் வந்துரும். இந்தப்போட்டியில செந்திலு ஜெயிச்சுட்டா லட்சக்கணக்குல பணம் வந்துரும். அப்புறமா காளியம்மா காட்டுலயும் வேல பார்க்க வேணாம், கால் மேல கால் போட்டுக்கிட்டு இருக்கலாம்" அப்படின்னு முடிச்சாரு சின்னகண்ணு.

புரிஞ்சும் புரியாத மாதிரியும் பல அம்மாக்கள் வாயைப்பிளந்துகிட்டு புரியாத அந்த ஸ்டார் டி.வியப் பார்த்துக்கிட்டு இருக்க. குட்டி செவுத்து மேல உட்காந்துகிட்டு இருந்த இளவட்டங்க "ஏன் மாப்ள. செந்திலு அவ்ளொ பெரிய ஆள் ஆயிட்டானாடா? கிஸ் சீனு வெச்சு இருப்பானோ அவன் படத்துல"ன்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுது. காளியம்மாவுக்கு அன்னிக்கு சேர் போட்டு முன்னாடி உட்கார வெச்சு இருந்தாங்க. அந்தப் பெருமை போதுமே. இந்த 2 வருஷமா செந்தில் அனுப்புற 2000 ரூவா பணத்தையே காளியம்மாவால செலவு செய்ய முடியல. ஊர்கவுண்டர் வீட்டுக்கு செந்திலு வாரவாரம் தவறாம போன் பண்ணி பேசுனதனால அவர் ஊருக்கு வராததுகூட பெரிசா தெரியல.

சேர்ல இருந்து திரும்பி உட்காந்து இருந்த மக்கள பார்த்துச்சு காளியம்மா. ஆம்பளைங்க எல்லாம் கயித்துக்கட்டில்ல உட்காந்து இருக்க, பொம்பளைங்க கீழே உட்காந்து காளியம்மாவை பொறாமையா பார்த்துட்டு இருந்தாங்க. "பாழாய் போன கண் ஆப்ரேஷன் பண்ணி 10 நாள் கூட ஆவல, பெரிசா கருப்புல கண்ணாடி வேற போட சொல்லி, கழட்டவும் கூடாதுன்னுட்டாங்க. டிவி வேற மங்களாய் தெரியுது" பையனை நல்லா பார்க்கனும்னு மனசுக்குள்ள வேண்டிக்கிட்டு இருந்தா காளியம்மா.
யாரோ யாரோ வராங்க குத்துவிளக்காட்டம் ஒன்ன வாங்கிட்டு போறாங்க. ஏதேதோ பேசுறாங்க, மக்களுக்கு ஒன்னும் புரியல. சின்னகண்ணு திடீர்னு "செந்திலு போட்டி வந்துருச்சு, கம்னு இருங்க"ன்னு சொல்ல எல்லார் கண்ணும் டிவி மேலையே இருக்க.

The Award Goes to the Documentary Film "one and only by Senthil kumar" அப்படின்னு சொல்ல கேமரா எல்லாம் செந்திலை நோக்கி திரும்பியது. கோட் சூட் போட்ட செந்திலு சந்தோசமா எழுதிருச்சு மேடையப் பார்த்து நடக்க, ஊரு சனம் அத்தனை வாய் பிளந்து பார்த்துச்சு. ஓட்டைபனியனும், கிழிஞ்ச லுங்கியுமா பார்த்தவனை இப்படி பார்க்க காளியம்மாவுக்கே ஒரு நிமிஷம் "எம்மவனா" அப்படின்னு ஆச்சர்யப்பட்டுருச்சு. "செந்தில் படத்துகு விருது கிடைச்சு"ன்னு சின்ன கண்ணு சொல்ல "செந்திலு ஏதோ இங்கிலீசு பேசி அந்த குத்துவிளக்குக்கு முத்தம் குடுத்துட்டு கீழே இறங்கி போய்ட்டாரு. "ஆத்தா, உன்னாலதான் இந்த விருது கிடைச்சுதாம்னு செந்திலு சொல்றான்"ன்னு சின்னகண்ணு சொல்ல,
"காளியாத்தா, செந்தில பார்த்தியா, தொரை மாதிரியே இருக்கான். சுத்தி போடுக்கா" "ஆத்தா செந்திலா இது. வெள்ளைக்காரன் மாதிரி இருக்கான்" "பங்காளி, எப்படிடா இப்படி ஆனான் இவன், எல்லாம் பணம் பண்ற வேலை" ஊர் மக்கள் அவுங்க அவுங்க மாதிரி பேசிட்டு எழுந்திருச்சு காளியம்மா கிட்டே வர . கருப்பு கண்ணாடி வழியே இரு கண்களிலும் கண்ணீர் வழிய அசையாம டிவிவே பார்த்துட்டு இருந்தா காளியம்மா. "காளியம்மா" தொட்டு எழுப்ப "உன்னாலதான் இந்த விருது கிடைச்சுதாம்னு செந்திலு சொல்றான்"ன்னு சொன்ன அடுத்த வினாடியே சந்தோசத்துல உசுரு போயிருந்தது காளியாம்மாவுக்கு.

May 12, 2008

சோடி போடலாமா சோடி

முள்ளை முள்ளால் கூட எடுக்கலாம்,
புகையை புகை வைத்து அணைக்க முடியுமா?
இரண்டு வெண்குழல் வத்திகளை வெச்சு புகைத்தல் தப்புன்னு சொல்ல நினைச்சேன்.


எத்தனை நாளைக்குத்தான் வூட்டுக்காரர் நிழலுல நிக்கிறது. அதான் வேலைக்குப் போலாம்னு இருக்கேன்.




காட்சி-1:

பெண்ணீயம்- பாரதி, இதுக்குத்தானா ஆசைப்பட்டாய்.

நீங்க சாண்ட்ரோ வெச்சு இருக்கீங்க, எனக்கு வேகன் ஆர் வாங்கி குடுங்க. அதுதான் சமத்துவம். இல்லாட்டி என்னை அடிமையா வெச்சு இருக்கீங்கன்னு எழுதிடுவேன், ஜாக்கிரதை. வாடி, போடான்னு சொன்னா புகார் குடுத்துருவேன், ஆமா.

காட்சி-2

சமத்துவம்- பாரதியும் காணாத பெண்ணீயம்.

ஏண்டி, கூலிய குடுத்தேனே, அதுலதான பலசரக்கு வாங்கின?


இல்ல மச்சான், உன்னோட சம்பளத்துல உனக்கு வேட்டி எடுத்துட்டேன். எத்தினி நாளிக்கு அத்தையே கட்டுவே? என்னோட கூலில கருவாடு வாங்கி குழம்பு வெச்சிருக்கேன். வந்து துன்னுடா மச்சான்.

ஜோடியில் ஆண் பாதணியில் ஊக்கு போட்டு இருப்பது- ஆண் எவ்வளவோ சிரமத்துக்கு இடையில் பொருளீட்டுகிறான். தன்னை அலங்காரம் செஞ்சுக்க மறந்துட்டு குடும்பத்துக்காக உழைக்கிறாங்க. ஆனால் சில பொண்ணுங்க அதைப் புரிஞ்சிக்காம டாம்பீக வாழ்வு வாழ நினைக்கிறாங்க. இது வரட்டு கெளரவம்தானுங்களே. அதுக்கு அர்த்தம் வர மாதிரி பெண் பாதணி விலையுயர்ந்ததா பக்கத்துல வெச்சேன். அதாவது புது பாதணி, குதி
(high heel) பெரிசா. இது ஆணுக்கும் பொருந்தும், பொண்ணுக்கும் பொருந்தும். அதே போல இந்த ஜோடிய ஆணோ, பெண்ணோ போட்டுக்க முடியாது. இந்தமாதிரி சமமில்லாத ஜோடி உபயோகப்படாது அப்படிங்கிற அர்த்தம் தான் அந்தப் படத்துக்கு. இது என் மனசுல பட்டது. வேற அர்த்தம் கூட இருக்கலாமா?

Jan 13, 2008

சில்லுகளுடன் ஒரு ஒளி விளையாட்டு


(1) அகாடியா-மைனேவுக்கு செப்டம்பர் மாதத்தில் ஒரு பயணம் சென்ற பொழுது எடுத்த படம்.
நேரம்-தமிழில் சிந்தித்துக் கொண்டிருந்த நேரம், நடுநிசியைத்தாண்டி..




(2) இதுவும் அதே இடத்தில் விடியற்காலை எடுத்த படம். அப்போதும் தமிழில்தான் சிந்திப்பதைப்பற்றி சிந்தித்திக் கொண்டிருந்தோம்.


(3)கார்னிங்- கண்ணாடி மாளிகையில் எடுத்த படம். கண்ணாடியிலேயே ஒரு அலங்காரம்..


(4) கார்னிங்- கண்ணாடி மாளிகை.

நிர்மூலம் உடையின் நிர்வாண

மென்றால்

நிர்வாணமும் ஒரு வகையில்

நீர்மூலமே.


(5) என் வீட்டில் ஒளி கொடுக்கும் இன்னொரு சில்லு. சுச்சியப் போட்டா வெளிச்சம்வரும் சில்லு.

(6)என் வீட்டு குளியறையில் இருக்கும் காலி குடுவை.
குளியறையிலே இருந்தாலும்
வெளிச்சத்தில் மட்டுமே
நிதமும் குளிக்கிறது..
காலியாய் இருப்பதால்
தினமும் நிரப்புகிறேன்
நீராவியால்...

Nov 15, 2007

Grand Canyon

Grand Canyon போயிருந்த சமயம் எடுத்த படங்கள்





Oct 23, 2007

காதல் ஜூரம்-1

(தமிழ் பதிவுலகத்தில் காதல்)

இவன் எழுதும் பதிவுக்கு பின்னூட்டம் விழுந்தது இதுதான் முதன் முறை. இதுவரைக்கு 26 எழுதியாச்சு. யாரும் கண்டுக்கலே. பிராமணீயம், பெரியாரீயம், வெங்காயம், டவுசர் கிழிஞ்சதுன்னு எழுதத் தெரியாதவனுக்கு எவன் பின்னூட்டம் போடுவான். இதையெல்லாம் எழுதனும்னு இவனுக்கு தெரியல.

Anonymous Said..
I like your writing style and your kavithai's. I dunno how to write in tamil. Or else I would have written in Tamil. I have added your blog to my fav. Eagerly waiting for your next poem.


சொந்தப்பேரில் எழுத, இவன் படம் போட்டுக்க விருப்பமில்லாமல், எழுதும் பதிவர்களில் இவனும் ஒருவன். Onsite வந்ததுல இருந்து தமிழ் மேல இவனுக்கு இருக்கிற பற்று அதிகமாக.. அதிகமாக எழுத ஆரம்பிச்ச போதுதான் கவிதை எழுத ஆரம்பிச்சான். அப்புறம் பிலாக் பண்ண ஆரம்பிச்சு உருப்படாத போனவன் இவன். தமிழ் ஆரவாரமே இல்லாத இடம், பணி புரியும் இடத்திலும் ஹிந்தி இப்படி தமிழுக்கு அப்பால் இருக்கிறவங்களுக்குத்தானே தமிழ் மேல இனம்புரியா ஆர்வம் வரும்.

இவன் எழுதும் கவிதையை யாரும் படிப்பதே இல்லை. இதற்கும், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி, பிலாக் குட்டு எல்லா இடத்திலேயும் பதிவை கூட்டி வெச்சு, எல்லா பட்டையயும் போட்டு ஒரு பின்னூட்டமும் வராத நிலையில இப்படி வந்த பின்னூட்டம் வந்ததே பெரிய சந்தோசமா இருந்துச்சு,. பின்னே வந்த மொத பின்னூட்டமே அனானி. ஹ்ம்ம், நடத்துவோம்னு உங்க பின்னூட்டத்துக்கு நன்றின்னு ஒரு பின்னூட்டம் போட்டு எண்ணிக்கையில் இன்னொன்னையும் சேர்த்து தமிழ்மணம் வந்து பார்த்தான். சோத்தாங்கை பக்கம் அவன் இடுகை தெரிஞ்சது. அடுத்த நிமிஷம் இன்னும் பின்னூட்டங்கள் வந்ததா ஜிமெயில் அறிவிப்பான் வந்து சொல்லிட்டு போனார்.

Anonymous Said
You are welcome.


Anonymous Said
"DONT PUBLISH"


Please add my gmail id so that we can chat in this weekend. "digitalwaves@********.com".

அட, நமக்கும் ஒரு ரசிகப் பட்டாளம் போல இருக்கேன்னு நினைச்சுகிட்டு weekend எப்படி என்ஜாய் பண்றதுன்னு பட்டியல் போட ஆரம்பிச்சான் ரகு.

விதி சொன்னது: அடப் பாவி இனிமே உனக்கு வீக் எண்ட் எல்லாமே பதிவுலகம் தான், அதனால கடேசி வாரம் என்ஜாய்!

Oct 9, 2007

நண்பனான சூனியன்


சனி உன்னை பிடிச்சிருக்குன்னு,
தெரு முக்கு ஆசாரி சொன்னாரு!
கேட்க மறுத்தது என்னோட பகுத்தறிவு
அன்னிக்குதான்டா உன்னைப் பார்த்தேன்.

நீ எங்க தெருவுக்கு குடியேறின முதல் நாள்
என்னோட அட்டையாட்டம் ஒட்டிகிட்டே!
என்னோட கடங்கார அட்டையெல்லாம்
என் பேர சொல்லியே தேய்ச்சுகிட்டே!

பாட்டில் ஒப்பன் பண்ணும்போது மட்டும்
உனக்கு எப்படியோ மூக்குல் வேக்குது!
இருக்கிறத எல்லாம் நீயே குடிக்கிறதால
எப்பவுமே எனக்கு மண்டை காயுது.

டீ கடைக்கு நான் போறத
யார் சொல்லாமலும் உனக்கு எப்படி தெரியுது?
காசு குடுக்கிற போது மட்டும் நீ எப்படி
எஸ்கேப் ஆகுறேன்னு எவனுக்கும் தெரியாது.

சம்பள நாள் வந்தா கவர் வருதோ இல்லியோ
ஆபிசுக்கு சிரிச்சுகிட்டே வந்து ஸ்டைலா நிப்பே!
மாசக் கடைசி ஆகி உன்னைத் தேடினா
யார்கிட்டேயும் சொல்லாம ஊரைவிட்டே ஓடிப் போயிருப்பே!

சுனாமி வந்து ஊரை யெல்லாம் தூக்குச்சு
உன்னைமட்டும் எப்படிடா விட்டு வெச்சது?
கழுதைய பார்த்தா யோகமாம், ஊர்ல சொன்னாங்கடா
உன்னைய பார்த்தா என் வாழ்க்கையே சூனியம்டா.

உன் நட்பு வேணுமின்னு யாருடா கேட்டா?
நீ வருவேன்னு தெரிஞசதுன்னா போடுவேன் எங்க வீட்டுக்கு பெரிய "Gate"டா!
சாகும்போது மறக்காம சொல்லி அனுப்புடா
வெக்கிறேன் ஊருக்கெல்லாம் பெரிய ட்ரீட்டா!

Oct 1, 2007

"ச்சிக்" கென்று சிக்காகஸ்

1)


2)
3)
4)

5)

Jul 17, 2007

அப்பா!


நான் நடை பழகும் போது
பல முறை விழுந்து இருக்கிறேன்.
அன்றெல்லாம் என் கால்களுக்கு
உங்கள் கரம் கொண்டு பலம் கொடுத்து
பெருமிதப் பட்டவரே நீங்கள்தான்,
இன்று நெடுந்தொலவில்,
சொந்த காலில் நிற்கும்போதோ
"வேண்டாம் ராஜா!
வந்துருடா, பார்க்காமல் இருக்க முடியல"
என்று தொலைபேசியில் கதறும் போது
என் கால்கள் பலமிழக்கின்றன அப்பா!


தந்தையின் பிறந்த நாளில் கண்ணீரோடு விவசாயி

Jul 11, 2007

பிரிவும் பிரிவின் நிமித்தமும்...

என்னை விட்டு பல நாள் நீ
விலகியிருக்க, தற்காலிகமேயன
அழுதவாறு என்னைத்
தேற்றியது மனம்!
பலநாள் மனம்வென்றது,
இம்முறையும் அதையே சொல்லியது,

ஆனாலும் மெளனமாய்
உள்ளுக்குள் அழுதபடியே!



தினம் ஒரு வதம் செய்கிறேன்
நாட்காட்டியை,
நல்ல காலம் வருமென
ஆறுதல் சொன்னபடி அதுவும் ஆயத்தமாகிறது
அடுத்த வதத்திற்கு!



இருவரிலும் ஜீவனில்லை
எனத் தெரிந்தும்
மண்ணில் தெரித்து சிதறி
என்னைப் பார்த்து ஏளனம் செய்கிறது
தோட்டத்துப் பூக்கள்!


இருமுறை முற்றத்திற்கு வந்து
விசாரித்து விட்டுப் போனது முழுநிலவு,
என் தாடி கண்டதும் சோகம் மறைத்தது,
மேகம் மூடி.


உனக்காகவே
கை கோர்த்து காத்திருக்கிறோம்
நிதமும் புதிதாய்!
நானும், நிலவும்
என் தோட்டத்து பூக்களும்!

Jun 25, 2007

புணர்வென்னும் கலவையில்

சுருக்கமான நெளிவுகளுக்குள்
நீள்கோடாய்
ஒரு முற்றுப்புள்ளி!

இருட்டு வண்ண திரவம்,
வேறொரு நிற கலவை,
கலக்கமாய் பார்வை!

நிகழ்களுக்கிடையே ஓட்டம்,
கனவென்னும் கற்பனை,
சிறையில் அகப்படாத
என் ரோமம்,
தேடித் தேடியே
கலைந்து போகிறேன்
வக்கிரத்தை!

புணர்வென்னும் கலவையில்
ஒருமை காணும் தனிமை!

தொலையத் தொலைய
காண்கிற மாயை,
புகை மண்டலத்தில்
நீர் வேட்கை!
வெதும்புகிறேன் நான்!

மஞ்சள் படுக்கையில்
வெளிச்சம் தேடும் என் பார்வை,
பொய் சொல்லியே
ஏமாற்றுகிறதா
உவமை?

Jun 10, 2007

மனிதம்

தாகம் தணிக்க
அடைத்து வைத்த மாசு நீர்!
ஏழைகளுக்கு நிலமில்லை,
உழுதவனுக்கும் சொந்தமில்லை!

ஒற்றையறையில் காற்றடைத்து
குளிரூட்டி நிதமும் நித்திரை!

ஆகாயத்தை ஓட்டை போட்டு
அண்ணாந்து வேடிக்கை!

ஒற்றைக் குச்சியில் நெருப்படைத்து
புகைவழியே சுகம் தேடி
அலையும் மானிடா!

(ஐம்)பூதங்களையும் சித்திரவதை செய்ய
எப்போதிருந்து பழகினாய்?



பனிமலைஎல்லாம்
கரையும் நேரத்தில்
பனி உறைய வீட்டுக்கு வீடு
குளிர்சாதன பெட்டி!


மரக்காட்டை எரித்து
கான்கிரீட் தோட்டத்தில
துளசி விதைக்கிறாய்!

இயற்கையிலிருந்து விலகி நின்று
விசித்திரத்தை பழகி
பெட்டிதட்டினால்
எல்லாம் வரும் என்று
பகுத்தறிவு பேச
வெட்கமாயில்லை?




பக்கத்துவீட்டு எழவு
தெரியாமல்
வலை அரட்டை நண்பனின்
ஜலதோஷத்திற்காக
கண்ணீரா?


நடுச்சாலையில்
உயிர் துடிக்கும் நேரத்தில்,
வெறுப்பாய் ரத்தம் பார்த்து
செவி அடைத்து
அலுவலகம் போக
கைக்கடிகாரம் பார்க்கிறாயே,


நாளையே நீ துடிக்க
இன்னொருவன்
கடிகாரம் பார்ப்பானே!

உன்னால்,
மனிதனுக்கு சிரச்சேதம்!
இயற்கைக்கு உயிர்ச்சேதம்!

மரித்துப்போனமனிதத்திற்கு
பூச்செண்டு தர
மனதில் மனிதம் விதை,

விருட்சம்கொண்டே
பல விழுதுகள் தாங்கி
நாளைய உலகுக்கு
நீயே ஒரு நல்பாதை!


அன்புடன் குழுமம் நடத்திய இரண்டாம் ஆண்டு இயல் கவிதை போட்டியில் திசைகள் ஆசிரியர் மாலனின் ஊக்கப்பரிசு பெற்ற கவிதை இது

Feb 14, 2007

டேய் காதலா-2


முதன் முறையாக,
ஒரு பகலின் இருட்டில் நாம்.
கையில் பசி தணிக்க பாப்கார்னும்,
சூடு தணிக்க பெஃப்சியும்.
திரையரங்கின் மூலை சீட் நமக்கு
தொந்தரவு செய்ய அருகிலும் யாருமில்லை.
பாப்கார்னை மட்டும்
தின்று விட்டு
எனைத் தின்னாமல்
பத்திரமாய் வீட்டில் விட்டாய்,
நமக்கு முதல் இருட்டே
பகலாய் போனதே!


உன் வீட்டில் யாருமில்லை என்று
அழைத்தாய் என்னை,
சினிமாவை போல்- அன்று
மழை இல்லை, மின்னல் இல்லை,
ஏன் இரவாகக் கூட இல்லை,
இடியும் இடிக்கவில்லை,

நானும் பயந்து வந்து
உன்னை கட்டியணைத்துக் கொள்ளவில்லை.


சே,
சினிமாவில் காட்டுவதெல்லாம்
பொய்யென்று நினைத்தேன்
ஆனாலும் சினிமாவில் காட்டாத
காட்சியெல்லாம் அரங்கேறியது,


சீ, சீ!
சினிமா அப்படியொன்றும் பொய் இல்லை!


உன் முதல் மாத சம்பளம்
ஒரு தோடும், பொட்டும்,
100 ரூபாயும் குடுத்தாய்.
நீ வாங்கிய பைக்கில்
என்னைத்தான் அமர்த்திப்பார்த்தாக
வேண்டும் என்று அடம் உனக்கு.
முக்காடு போட்டபடி உன்னைத் தொடாமல்
ரோட்டி ஊர்ந்தபடி நானும், பைக்கும்.
தோடும், பொட்டும், பணமும்
பத்திரமாய் பையில்,
மனம் மட்டும வானத்தில்!



டிராபிக் சிக்னல்,
இறுக்கி அணைத்த படி
முன் வண்டியில்
இளம் தம்பதி!
வயிறு எரிந்தது எனக்கு.
சீக்கிரமே,
என்னை கல்யாணம் பண்ணுடா,
ஆயிரம் பேரயாவது
வயிறு எரிய வெக்கிறேன்.





நீ சிகரெட் பிடிக்கும் போதெல்லாம்
பிடிங்கி வைத்துக்கொண்ட சிகரெட்டுகள்
பெட்டி வழிய என் அறையில்.
அவற்றை பிடிக்கவாவது என் அறைக்கு
யாருக்கும் தெரியாமல் வந்து போடா!







"காதலர் தினத்துக்கு என்ன தருவாய்?"
என்று கேட்டேன்,
"என்னைத்தரவா?" என்றாய்,
எதற்கு? உன்னைக் கொடுத்து
"என்னை எடுத்துக் கொள்வாய்,
அப்படியே கொல்லவும் செய்வாய்.
"அப்போ உன்னை பார்க்க
வர மாட்டேன் என்றாய்".
"பரிமாற்றம், நாளை மட்டும்" என்றேன்,
ஆயிரமாவது தடவையாக.

Jan 15, 2007

பொங்கலுக்கும் பசிக்குதே





ஊரெல்லாம் கும்மாளம்,
புதுத்துணி, உதட்டுல் புன்னகை,
தெருவெங்கும் பொங்கல் பொங்குது!
பசி வந்த எந்தம்பி மட்டும்
அழும் குரலோடு.




"நல்ல நாள் அதுவுமாய் வந்துட்டியே"
விரட்டியது குண்டம்மா.

இந்த பொங்கல் நாளிலாவது
பசிக்கத் தெரியாமல்
இருந்திருக்கக் கூடாதா?


தியேட்டர் வாசலில் பெரும் கூட்டம்
3 நாளா 10 பேர் அலங்காரம் செய்ய
100 அடி உசரத்துல ஒரு நடிகர்.





குடம் குடமாய் பாலாபிசேகம்...
ஒரு தம்ளருல குடுங்கய்யா
தம்பி வயிறாவது நனையட்டும்.

ஊரெல்லாம் கும்மாளம்,
புதுத்துணி,
உதட்டுல் புன்னகை,
தெருவெங்கும் பொங்கல் பொங்குது!

பசியோட திரும்பவும் தம்பி அழ,
கையேந்தி ஆரம்பிச்சேன்
"அம்மா தாயே.."

பட உதவி-நன்றி-தினமலர்

Nov 17, 2006

டேய் காதலா-1

என்னை நேசித்த காதலிக்காக
அவள் பார்வையிலேயே
ஒர்
கவிதை!





என்னைப் பார்த்து
கண்சிமிட்டியபடி தெரு விளக்கு
விரல் நீட்டு மிரட்டிச்சென்றாய்
கோளாறு விளக்கிலா? உன்னிலா?





உன் காதுக்கும் இதழுக்கும்
இடையே பாலமாய் அலைபேசி,
யாரோ ஒரு சக்களத்திதான்
மறுமுனையில் சிரித்து,
கொஞ்சி,
பேசிக்கொண்டிருக்கிறாள்
கோவம்தான் - ஆனால்
நீ கொஞ்சுவதை
நான் எப்போதுதான் பார்ப்பதாம்
நீ என்னைக்
கொஞ்சும் போதுதான்
என் கண்கள்
திறக்கவே மாட்டேன் என்று
அடம்பிடித்து
தொலைக்கிறதே.




பூவைத்து
என்னை அழகு பார்த்தபின்,
பூவோடு
என்னையும் சேர்த்து
கசக்கி போடுவதே
உனக்கு
வழக்கமாகிவிட்டது.
நீ என்ன குரங்கா? இல்லை
நான்தான் பூமாலையா?





உன் தீவிரவாதப்பார்வையால்
பார்த்தும் கொல்கிறாய்,
வேண்டாமென்றாலும்
அஹிம்சாவாதியைப்போல்
பார்க்காமலேயும் கொல்கிறாய்
இரண்டுமல்லாமல்
மூன்றாவதுக்கு
எங்கே போவேன்?



காதலிக்கும்போது
மனைவியாகச்சொன்னாய்,
மனைவியான போது
காதலியாகச் சொன்னாய்,
போடா லூசு,
உனக்கு ஒரே மாதிரியான புத்தி இல்லையா?




(தொடரும்)

Oct 11, 2006

வேலை வேலை வேலை...

இருவருக்குமே இன்று நேர்முகத்தேர்வு. இருவருமே மெத்த படித்து நல்ல மதிப்பெண் பெற்றே கல்லூரி வாழ்க்கையை முடித்தனர். இருவருக்கும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
"உங்கள் வாழ்க்கையின் லட்சியமென்ன?" இருவருமே சொதப்பலாய் பதில் சொல்லி வேலையில்லாமல் வெளியே வந்தார்கள்.

ரகு சொன்னான் "மாப்பிள்ளே கவலைய விடுடா, Take it easy. இத மறந்துட்டு அடுத்த வேலையை தேடுவோம்".

ஆனால் ராமோ வெகு யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த நேர்முகத்தேர்வு. இருவருக்குமே அதிர்ச்சி, ஏனெனில் மீண்டும் அதே கேள்வி.

போனமுறை சொன்ன பதிலை வேறு விதமாக சொன்னான், ரகு.

பதிலையே மாற்றி தேர்வு நடத்துபவரையே அசர அடித்து வேலை வாங்கினான் ராம்.

வெளியே ஏமாற்றத்துடன் வந்த ரகு
"மாப்ளே எப்படிடா வேலை கிடைச்சுது, என்னடா சொன்னே?"

"போனமுறை கேட்ட கேள்விக்கு என்ன பதில் சரியா இருக்கும்னு யோசிச்சுகிட்டே வீடு போய் சேர்ந்தேன். அதுதான் உதவுச்சு. வேலை போனதுக்கு வேணும்னா Take it easyன்னு சொல்லலாம். ஆனா கேட்ட கேள்விகளை அப்படி உதறிடக்கூடாது. அந்தக் கேள்வி எப்போ வேணுமின்னாலும், யார் வேணுமின்னாலும் கேட்கலாம், அதுக்கு சரியா பதில் சொல்லிட்டா வெற்றி நம் பக்கம்"ன்னு சொல்லி வேலையில் சேர்ந்தான் ராம்.

Sep 18, 2006

சில்லுனு ஒரு ஆட்டோகிராஃப்

கல்யாணம் முடிந்த கையோடு துணைவி சகிதம் விமானம் ஏறிய நான் 12 வருடம் கழித்து இன்றுதான் என் கிராமத்து மண் மிதிக்கிறேன்.

அழகிய என் கிராமம்


பழைய புத்தகங்களுக்கு நடுவே
சிப்பியிலிருக்கும் முத்தைப் போல
டைரியின் வடிவில்
பரண் மீது தூசியுடன்
இன்னும் இருந்தது
என் நினைவுகளும் அவள் காதலும்.


முதல் வேலையாக அவளைத்தேடி,
மளிகைக்கடை அண்ணாச்சிக்கு
வாக்கப்பட்டதாய் அம்மா சொன்னது
இன்னும் காதுகளில் ரீங்காரமிட்டது.

இளமை தொலைத்து,
உருவம் பெருத்து,
மளிகைக்கடையில் அவள்.

மனதுள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்,
கண்களில் பழைய காதலுடன்,
பேச முடியாமல் அவளையே பார்த்தபடி
ஊமையாய் நின்று கொண்டிருந்தேன்.

"என்னங்க வேணும்?" அவள்.

"என்னைத்தெரியுதா வசந்தி?" ஊற்றெடுத்த காதலுடன் கேட்டேன்.

"தெரியலையே"

"நாந்தான் மணியாக்கவுண்டர் பையன் சண்முகம்" என்றேன் புன்னகை வழிய.

"அட ஆமா, சரியா அடையாளம் தெரியல. என்னங்க வேணும்?"
என்று கேட்டாள்

முகத்தில்
எந்த சலனமும் இல்லாமல்,
தொழிலை மனதில் வைத்த
அந்த மளிகைக்கடைக்காரி.

"ஒன்றும் வேண்டாம்" என்று நடையைக்கட்டினேன் வீட்டை நோக்கி.

விடியற்காலை,
தண்ணிக்காக மூட்டிய அடுப்பில்,
அந்த டைரியையும்,
அவள் நினைவுகளையும்

திணித்துவிட்டு
நிம்மதியாய் என் வாரிசை
அணைத்து முத்தமிட்டேன்!