Oct 23, 2007

காதல் ஜூரம்-1

(தமிழ் பதிவுலகத்தில் காதல்)

இவன் எழுதும் பதிவுக்கு பின்னூட்டம் விழுந்தது இதுதான் முதன் முறை. இதுவரைக்கு 26 எழுதியாச்சு. யாரும் கண்டுக்கலே. பிராமணீயம், பெரியாரீயம், வெங்காயம், டவுசர் கிழிஞ்சதுன்னு எழுதத் தெரியாதவனுக்கு எவன் பின்னூட்டம் போடுவான். இதையெல்லாம் எழுதனும்னு இவனுக்கு தெரியல.

Anonymous Said..
I like your writing style and your kavithai's. I dunno how to write in tamil. Or else I would have written in Tamil. I have added your blog to my fav. Eagerly waiting for your next poem.


சொந்தப்பேரில் எழுத, இவன் படம் போட்டுக்க விருப்பமில்லாமல், எழுதும் பதிவர்களில் இவனும் ஒருவன். Onsite வந்ததுல இருந்து தமிழ் மேல இவனுக்கு இருக்கிற பற்று அதிகமாக.. அதிகமாக எழுத ஆரம்பிச்ச போதுதான் கவிதை எழுத ஆரம்பிச்சான். அப்புறம் பிலாக் பண்ண ஆரம்பிச்சு உருப்படாத போனவன் இவன். தமிழ் ஆரவாரமே இல்லாத இடம், பணி புரியும் இடத்திலும் ஹிந்தி இப்படி தமிழுக்கு அப்பால் இருக்கிறவங்களுக்குத்தானே தமிழ் மேல இனம்புரியா ஆர்வம் வரும்.

இவன் எழுதும் கவிதையை யாரும் படிப்பதே இல்லை. இதற்கும், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்வெளி, பிலாக் குட்டு எல்லா இடத்திலேயும் பதிவை கூட்டி வெச்சு, எல்லா பட்டையயும் போட்டு ஒரு பின்னூட்டமும் வராத நிலையில இப்படி வந்த பின்னூட்டம் வந்ததே பெரிய சந்தோசமா இருந்துச்சு,. பின்னே வந்த மொத பின்னூட்டமே அனானி. ஹ்ம்ம், நடத்துவோம்னு உங்க பின்னூட்டத்துக்கு நன்றின்னு ஒரு பின்னூட்டம் போட்டு எண்ணிக்கையில் இன்னொன்னையும் சேர்த்து தமிழ்மணம் வந்து பார்த்தான். சோத்தாங்கை பக்கம் அவன் இடுகை தெரிஞ்சது. அடுத்த நிமிஷம் இன்னும் பின்னூட்டங்கள் வந்ததா ஜிமெயில் அறிவிப்பான் வந்து சொல்லிட்டு போனார்.

Anonymous Said
You are welcome.


Anonymous Said
"DONT PUBLISH"


Please add my gmail id so that we can chat in this weekend. "digitalwaves@********.com".

அட, நமக்கும் ஒரு ரசிகப் பட்டாளம் போல இருக்கேன்னு நினைச்சுகிட்டு weekend எப்படி என்ஜாய் பண்றதுன்னு பட்டியல் போட ஆரம்பிச்சான் ரகு.

விதி சொன்னது: அடப் பாவி இனிமே உனக்கு வீக் எண்ட் எல்லாமே பதிவுலகம் தான், அதனால கடேசி வாரம் என்ஜாய்!

Oct 9, 2007

நண்பனான சூனியன்


சனி உன்னை பிடிச்சிருக்குன்னு,
தெரு முக்கு ஆசாரி சொன்னாரு!
கேட்க மறுத்தது என்னோட பகுத்தறிவு
அன்னிக்குதான்டா உன்னைப் பார்த்தேன்.

நீ எங்க தெருவுக்கு குடியேறின முதல் நாள்
என்னோட அட்டையாட்டம் ஒட்டிகிட்டே!
என்னோட கடங்கார அட்டையெல்லாம்
என் பேர சொல்லியே தேய்ச்சுகிட்டே!

பாட்டில் ஒப்பன் பண்ணும்போது மட்டும்
உனக்கு எப்படியோ மூக்குல் வேக்குது!
இருக்கிறத எல்லாம் நீயே குடிக்கிறதால
எப்பவுமே எனக்கு மண்டை காயுது.

டீ கடைக்கு நான் போறத
யார் சொல்லாமலும் உனக்கு எப்படி தெரியுது?
காசு குடுக்கிற போது மட்டும் நீ எப்படி
எஸ்கேப் ஆகுறேன்னு எவனுக்கும் தெரியாது.

சம்பள நாள் வந்தா கவர் வருதோ இல்லியோ
ஆபிசுக்கு சிரிச்சுகிட்டே வந்து ஸ்டைலா நிப்பே!
மாசக் கடைசி ஆகி உன்னைத் தேடினா
யார்கிட்டேயும் சொல்லாம ஊரைவிட்டே ஓடிப் போயிருப்பே!

சுனாமி வந்து ஊரை யெல்லாம் தூக்குச்சு
உன்னைமட்டும் எப்படிடா விட்டு வெச்சது?
கழுதைய பார்த்தா யோகமாம், ஊர்ல சொன்னாங்கடா
உன்னைய பார்த்தா என் வாழ்க்கையே சூனியம்டா.

உன் நட்பு வேணுமின்னு யாருடா கேட்டா?
நீ வருவேன்னு தெரிஞசதுன்னா போடுவேன் எங்க வீட்டுக்கு பெரிய "Gate"டா!
சாகும்போது மறக்காம சொல்லி அனுப்புடா
வெக்கிறேன் ஊருக்கெல்லாம் பெரிய ட்ரீட்டா!

Oct 1, 2007

"ச்சிக்" கென்று சிக்காகஸ்

1)


2)
3)
4)

5)

Jul 17, 2007

அப்பா!


நான் நடை பழகும் போது
பல முறை விழுந்து இருக்கிறேன்.
அன்றெல்லாம் என் கால்களுக்கு
உங்கள் கரம் கொண்டு பலம் கொடுத்து
பெருமிதப் பட்டவரே நீங்கள்தான்,
இன்று நெடுந்தொலவில்,
சொந்த காலில் நிற்கும்போதோ
"வேண்டாம் ராஜா!
வந்துருடா, பார்க்காமல் இருக்க முடியல"
என்று தொலைபேசியில் கதறும் போது
என் கால்கள் பலமிழக்கின்றன அப்பா!


தந்தையின் பிறந்த நாளில் கண்ணீரோடு விவசாயி

Jul 11, 2007

பிரிவும் பிரிவின் நிமித்தமும்...

என்னை விட்டு பல நாள் நீ
விலகியிருக்க, தற்காலிகமேயன
அழுதவாறு என்னைத்
தேற்றியது மனம்!
பலநாள் மனம்வென்றது,
இம்முறையும் அதையே சொல்லியது,

ஆனாலும் மெளனமாய்
உள்ளுக்குள் அழுதபடியே!



தினம் ஒரு வதம் செய்கிறேன்
நாட்காட்டியை,
நல்ல காலம் வருமென
ஆறுதல் சொன்னபடி அதுவும் ஆயத்தமாகிறது
அடுத்த வதத்திற்கு!



இருவரிலும் ஜீவனில்லை
எனத் தெரிந்தும்
மண்ணில் தெரித்து சிதறி
என்னைப் பார்த்து ஏளனம் செய்கிறது
தோட்டத்துப் பூக்கள்!


இருமுறை முற்றத்திற்கு வந்து
விசாரித்து விட்டுப் போனது முழுநிலவு,
என் தாடி கண்டதும் சோகம் மறைத்தது,
மேகம் மூடி.


உனக்காகவே
கை கோர்த்து காத்திருக்கிறோம்
நிதமும் புதிதாய்!
நானும், நிலவும்
என் தோட்டத்து பூக்களும்!

Jun 25, 2007

புணர்வென்னும் கலவையில்

சுருக்கமான நெளிவுகளுக்குள்
நீள்கோடாய்
ஒரு முற்றுப்புள்ளி!

இருட்டு வண்ண திரவம்,
வேறொரு நிற கலவை,
கலக்கமாய் பார்வை!

நிகழ்களுக்கிடையே ஓட்டம்,
கனவென்னும் கற்பனை,
சிறையில் அகப்படாத
என் ரோமம்,
தேடித் தேடியே
கலைந்து போகிறேன்
வக்கிரத்தை!

புணர்வென்னும் கலவையில்
ஒருமை காணும் தனிமை!

தொலையத் தொலைய
காண்கிற மாயை,
புகை மண்டலத்தில்
நீர் வேட்கை!
வெதும்புகிறேன் நான்!

மஞ்சள் படுக்கையில்
வெளிச்சம் தேடும் என் பார்வை,
பொய் சொல்லியே
ஏமாற்றுகிறதா
உவமை?

Jun 10, 2007

மனிதம்

தாகம் தணிக்க
அடைத்து வைத்த மாசு நீர்!
ஏழைகளுக்கு நிலமில்லை,
உழுதவனுக்கும் சொந்தமில்லை!

ஒற்றையறையில் காற்றடைத்து
குளிரூட்டி நிதமும் நித்திரை!

ஆகாயத்தை ஓட்டை போட்டு
அண்ணாந்து வேடிக்கை!

ஒற்றைக் குச்சியில் நெருப்படைத்து
புகைவழியே சுகம் தேடி
அலையும் மானிடா!

(ஐம்)பூதங்களையும் சித்திரவதை செய்ய
எப்போதிருந்து பழகினாய்?



பனிமலைஎல்லாம்
கரையும் நேரத்தில்
பனி உறைய வீட்டுக்கு வீடு
குளிர்சாதன பெட்டி!


மரக்காட்டை எரித்து
கான்கிரீட் தோட்டத்தில
துளசி விதைக்கிறாய்!

இயற்கையிலிருந்து விலகி நின்று
விசித்திரத்தை பழகி
பெட்டிதட்டினால்
எல்லாம் வரும் என்று
பகுத்தறிவு பேச
வெட்கமாயில்லை?




பக்கத்துவீட்டு எழவு
தெரியாமல்
வலை அரட்டை நண்பனின்
ஜலதோஷத்திற்காக
கண்ணீரா?


நடுச்சாலையில்
உயிர் துடிக்கும் நேரத்தில்,
வெறுப்பாய் ரத்தம் பார்த்து
செவி அடைத்து
அலுவலகம் போக
கைக்கடிகாரம் பார்க்கிறாயே,


நாளையே நீ துடிக்க
இன்னொருவன்
கடிகாரம் பார்ப்பானே!

உன்னால்,
மனிதனுக்கு சிரச்சேதம்!
இயற்கைக்கு உயிர்ச்சேதம்!

மரித்துப்போனமனிதத்திற்கு
பூச்செண்டு தர
மனதில் மனிதம் விதை,

விருட்சம்கொண்டே
பல விழுதுகள் தாங்கி
நாளைய உலகுக்கு
நீயே ஒரு நல்பாதை!


அன்புடன் குழுமம் நடத்திய இரண்டாம் ஆண்டு இயல் கவிதை போட்டியில் திசைகள் ஆசிரியர் மாலனின் ஊக்கப்பரிசு பெற்ற கவிதை இது

Feb 14, 2007

டேய் காதலா-2


முதன் முறையாக,
ஒரு பகலின் இருட்டில் நாம்.
கையில் பசி தணிக்க பாப்கார்னும்,
சூடு தணிக்க பெஃப்சியும்.
திரையரங்கின் மூலை சீட் நமக்கு
தொந்தரவு செய்ய அருகிலும் யாருமில்லை.
பாப்கார்னை மட்டும்
தின்று விட்டு
எனைத் தின்னாமல்
பத்திரமாய் வீட்டில் விட்டாய்,
நமக்கு முதல் இருட்டே
பகலாய் போனதே!


உன் வீட்டில் யாருமில்லை என்று
அழைத்தாய் என்னை,
சினிமாவை போல்- அன்று
மழை இல்லை, மின்னல் இல்லை,
ஏன் இரவாகக் கூட இல்லை,
இடியும் இடிக்கவில்லை,

நானும் பயந்து வந்து
உன்னை கட்டியணைத்துக் கொள்ளவில்லை.


சே,
சினிமாவில் காட்டுவதெல்லாம்
பொய்யென்று நினைத்தேன்
ஆனாலும் சினிமாவில் காட்டாத
காட்சியெல்லாம் அரங்கேறியது,


சீ, சீ!
சினிமா அப்படியொன்றும் பொய் இல்லை!


உன் முதல் மாத சம்பளம்
ஒரு தோடும், பொட்டும்,
100 ரூபாயும் குடுத்தாய்.
நீ வாங்கிய பைக்கில்
என்னைத்தான் அமர்த்திப்பார்த்தாக
வேண்டும் என்று அடம் உனக்கு.
முக்காடு போட்டபடி உன்னைத் தொடாமல்
ரோட்டி ஊர்ந்தபடி நானும், பைக்கும்.
தோடும், பொட்டும், பணமும்
பத்திரமாய் பையில்,
மனம் மட்டும வானத்தில்!



டிராபிக் சிக்னல்,
இறுக்கி அணைத்த படி
முன் வண்டியில்
இளம் தம்பதி!
வயிறு எரிந்தது எனக்கு.
சீக்கிரமே,
என்னை கல்யாணம் பண்ணுடா,
ஆயிரம் பேரயாவது
வயிறு எரிய வெக்கிறேன்.





நீ சிகரெட் பிடிக்கும் போதெல்லாம்
பிடிங்கி வைத்துக்கொண்ட சிகரெட்டுகள்
பெட்டி வழிய என் அறையில்.
அவற்றை பிடிக்கவாவது என் அறைக்கு
யாருக்கும் தெரியாமல் வந்து போடா!







"காதலர் தினத்துக்கு என்ன தருவாய்?"
என்று கேட்டேன்,
"என்னைத்தரவா?" என்றாய்,
எதற்கு? உன்னைக் கொடுத்து
"என்னை எடுத்துக் கொள்வாய்,
அப்படியே கொல்லவும் செய்வாய்.
"அப்போ உன்னை பார்க்க
வர மாட்டேன் என்றாய்".
"பரிமாற்றம், நாளை மட்டும்" என்றேன்,
ஆயிரமாவது தடவையாக.

Jan 15, 2007

பொங்கலுக்கும் பசிக்குதே





ஊரெல்லாம் கும்மாளம்,
புதுத்துணி, உதட்டுல் புன்னகை,
தெருவெங்கும் பொங்கல் பொங்குது!
பசி வந்த எந்தம்பி மட்டும்
அழும் குரலோடு.




"நல்ல நாள் அதுவுமாய் வந்துட்டியே"
விரட்டியது குண்டம்மா.

இந்த பொங்கல் நாளிலாவது
பசிக்கத் தெரியாமல்
இருந்திருக்கக் கூடாதா?


தியேட்டர் வாசலில் பெரும் கூட்டம்
3 நாளா 10 பேர் அலங்காரம் செய்ய
100 அடி உசரத்துல ஒரு நடிகர்.





குடம் குடமாய் பாலாபிசேகம்...
ஒரு தம்ளருல குடுங்கய்யா
தம்பி வயிறாவது நனையட்டும்.

ஊரெல்லாம் கும்மாளம்,
புதுத்துணி,
உதட்டுல் புன்னகை,
தெருவெங்கும் பொங்கல் பொங்குது!

பசியோட திரும்பவும் தம்பி அழ,
கையேந்தி ஆரம்பிச்சேன்
"அம்மா தாயே.."

பட உதவி-நன்றி-தினமலர்

Nov 17, 2006

டேய் காதலா-1

என்னை நேசித்த காதலிக்காக
அவள் பார்வையிலேயே
ஒர்
கவிதை!





என்னைப் பார்த்து
கண்சிமிட்டியபடி தெரு விளக்கு
விரல் நீட்டு மிரட்டிச்சென்றாய்
கோளாறு விளக்கிலா? உன்னிலா?





உன் காதுக்கும் இதழுக்கும்
இடையே பாலமாய் அலைபேசி,
யாரோ ஒரு சக்களத்திதான்
மறுமுனையில் சிரித்து,
கொஞ்சி,
பேசிக்கொண்டிருக்கிறாள்
கோவம்தான் - ஆனால்
நீ கொஞ்சுவதை
நான் எப்போதுதான் பார்ப்பதாம்
நீ என்னைக்
கொஞ்சும் போதுதான்
என் கண்கள்
திறக்கவே மாட்டேன் என்று
அடம்பிடித்து
தொலைக்கிறதே.




பூவைத்து
என்னை அழகு பார்த்தபின்,
பூவோடு
என்னையும் சேர்த்து
கசக்கி போடுவதே
உனக்கு
வழக்கமாகிவிட்டது.
நீ என்ன குரங்கா? இல்லை
நான்தான் பூமாலையா?





உன் தீவிரவாதப்பார்வையால்
பார்த்தும் கொல்கிறாய்,
வேண்டாமென்றாலும்
அஹிம்சாவாதியைப்போல்
பார்க்காமலேயும் கொல்கிறாய்
இரண்டுமல்லாமல்
மூன்றாவதுக்கு
எங்கே போவேன்?



காதலிக்கும்போது
மனைவியாகச்சொன்னாய்,
மனைவியான போது
காதலியாகச் சொன்னாய்,
போடா லூசு,
உனக்கு ஒரே மாதிரியான புத்தி இல்லையா?




(தொடரும்)

Oct 11, 2006

வேலை வேலை வேலை...

இருவருக்குமே இன்று நேர்முகத்தேர்வு. இருவருமே மெத்த படித்து நல்ல மதிப்பெண் பெற்றே கல்லூரி வாழ்க்கையை முடித்தனர். இருவருக்கும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
"உங்கள் வாழ்க்கையின் லட்சியமென்ன?" இருவருமே சொதப்பலாய் பதில் சொல்லி வேலையில்லாமல் வெளியே வந்தார்கள்.

ரகு சொன்னான் "மாப்பிள்ளே கவலைய விடுடா, Take it easy. இத மறந்துட்டு அடுத்த வேலையை தேடுவோம்".

ஆனால் ராமோ வெகு யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த நேர்முகத்தேர்வு. இருவருக்குமே அதிர்ச்சி, ஏனெனில் மீண்டும் அதே கேள்வி.

போனமுறை சொன்ன பதிலை வேறு விதமாக சொன்னான், ரகு.

பதிலையே மாற்றி தேர்வு நடத்துபவரையே அசர அடித்து வேலை வாங்கினான் ராம்.

வெளியே ஏமாற்றத்துடன் வந்த ரகு
"மாப்ளே எப்படிடா வேலை கிடைச்சுது, என்னடா சொன்னே?"

"போனமுறை கேட்ட கேள்விக்கு என்ன பதில் சரியா இருக்கும்னு யோசிச்சுகிட்டே வீடு போய் சேர்ந்தேன். அதுதான் உதவுச்சு. வேலை போனதுக்கு வேணும்னா Take it easyன்னு சொல்லலாம். ஆனா கேட்ட கேள்விகளை அப்படி உதறிடக்கூடாது. அந்தக் கேள்வி எப்போ வேணுமின்னாலும், யார் வேணுமின்னாலும் கேட்கலாம், அதுக்கு சரியா பதில் சொல்லிட்டா வெற்றி நம் பக்கம்"ன்னு சொல்லி வேலையில் சேர்ந்தான் ராம்.

Sep 18, 2006

சில்லுனு ஒரு ஆட்டோகிராஃப்

கல்யாணம் முடிந்த கையோடு துணைவி சகிதம் விமானம் ஏறிய நான் 12 வருடம் கழித்து இன்றுதான் என் கிராமத்து மண் மிதிக்கிறேன்.

அழகிய என் கிராமம்


பழைய புத்தகங்களுக்கு நடுவே
சிப்பியிலிருக்கும் முத்தைப் போல
டைரியின் வடிவில்
பரண் மீது தூசியுடன்
இன்னும் இருந்தது
என் நினைவுகளும் அவள் காதலும்.


முதல் வேலையாக அவளைத்தேடி,
மளிகைக்கடை அண்ணாச்சிக்கு
வாக்கப்பட்டதாய் அம்மா சொன்னது
இன்னும் காதுகளில் ரீங்காரமிட்டது.

இளமை தொலைத்து,
உருவம் பெருத்து,
மளிகைக்கடையில் அவள்.

மனதுள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்,
கண்களில் பழைய காதலுடன்,
பேச முடியாமல் அவளையே பார்த்தபடி
ஊமையாய் நின்று கொண்டிருந்தேன்.

"என்னங்க வேணும்?" அவள்.

"என்னைத்தெரியுதா வசந்தி?" ஊற்றெடுத்த காதலுடன் கேட்டேன்.

"தெரியலையே"

"நாந்தான் மணியாக்கவுண்டர் பையன் சண்முகம்" என்றேன் புன்னகை வழிய.

"அட ஆமா, சரியா அடையாளம் தெரியல. என்னங்க வேணும்?"
என்று கேட்டாள்

முகத்தில்
எந்த சலனமும் இல்லாமல்,
தொழிலை மனதில் வைத்த
அந்த மளிகைக்கடைக்காரி.

"ஒன்றும் வேண்டாம்" என்று நடையைக்கட்டினேன் வீட்டை நோக்கி.

விடியற்காலை,
தண்ணிக்காக மூட்டிய அடுப்பில்,
அந்த டைரியையும்,
அவள் நினைவுகளையும்

திணித்துவிட்டு
நிம்மதியாய் என் வாரிசை
அணைத்து முத்தமிட்டேன்!

Sep 6, 2006

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?


களை கட்டி இருந்தது என் அலுவலகம்.
இளம்விதவை ஒருவருக்கு புதுப்பதவியாம்,
கண்களில் இச்சையும், மனதினில் காமத்தையும்
ஒருங்கேற்றி வாசனையோடு ஆண்கள் கூட்டம்.

விட்டு விலகி வாசல் வந்தேன், கைபோனில்
நண்பனுடன் உரையாடுகையில் கடந்து போனது
சோகம் கண்ட ஒரு உருவம்,
தோன்றவில்லை திரும்பிப்பார்க்க.

அதிகாரி அறிமுகப்படுத்துகையில் கண்டேன் அவளை,
கருவளையம் கொண்ட ஒளி இழந்த கண்கள்,
பரிதாபமோ, பச்சாதாபமோ ஒன்றும் தோன்றவில்லை.
புன்னகையுடன் விலகினேன்,
புருவம் தூக்கி என் முதுகை முறைத்துவிட்டு போனாள்.

உள் நோக்கம் கொண்ட வக்கிரத்தால்
ஆண்களை வெறுத்திருந்தாள்.
கண்டும் காணாமல் அவளிடமிருந்து
ஒதுங்கியதால் என்னை ஸ்நேகித்திருந்தால்.


ஒரு நாள் பேசியது மடந்தை,
தாலி கட்டிய ஒரு மணியில்
கணவனை,
பெற்றோரை இழந்து துர்பாக்கியவதியானவள்.
சமுதாயம் ஒதுக்க,
ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையில்,
பாரதி கண்ட பெண்ணாய்,
எரித்துவிட்டு வந்திருந்தாள், தூற்றியவர்களை.





விடுதி ஒன்றில் வாசம்,
வயிற்று பிழைப்புக்காக அலுவலகம்,
இரவு தனிமையைத் தணிக்க,
வடியாக் கண்ணீர்!
தனியே மூலையில் கதறும் இதயம்,
அது மூன்றாமவருக்கு தெரியக்கூடாதென்ற கர்வம்!
இவைதான் அவள்!





முதன் முதலில் கண்ணீர் கண்டது என் இதயம்,
மாற்றத்திற்காக அந்த ஞாயிறு
வெளியே சென்றுவர ஒப்பந்தமாகியது.
கூடும் இடம் ஒரு ஐஸ்கிரீம் கடை என்றும் முடிவாகியது.
மாற்றம் அவளிடத்தா? என்னிடத்தா?
"வெத்துப்பேச்சு" என்றடக்கினேன் மனதை.


ஞாயிறு, நல்ல தூங்கிகிட்டு இருக்கேன். ஒரு மிஸ்ட் கால் என் மொபைல் போனில். என்னோட வாழ்க்கையில் வந்த முதல் மிஸ்ட்கால், அட யாருடா நமக்கு மிஸ்டு தரதுன்னு எடுத்துப்பார்த்தா அவளேதான்? ஏன்? அடப்பாவி 9:30 க்கு அவளோட வெளியே போறேன்னு சொல்லிட்டு 10 மணி வரைக்கு தூங்கிக்கிட்டு இருந்தா போன் பண்ண மாட்டாங்களா? அப்ப கூட இந்த பொண்ணுங்க மிஸ்ட் கால்தான் தருவாங்களா? சச்சின் படத்துல சந்தானம் சொன்னது அசை போட்டு முடிக்கிறதுக்குள்ள என் வண்டியை ஐஸ்கிரீம் கடை முன் நிறுத்தியிருந்தேன்.





பேருந்து கூட்ட நெரிசலில் அவள்,
கசங்கியது என் மனம்.




வார்த்தைகள் இடம் மாறியது,
கண்டேன் அவளுள் இருந்த வேறோருத்தியை,
அவள் சிரித்து அப்போதுதான் பார்த்தேன்.
அவள் விழுங்கிகொண்டே இருக்க,
கரைந்துவிட்டு இருந்தது
எனக்கான ஐஸ்கிரீமும், என் பர்ஸும்.
வெளியே வந்தபோது என்மனதும்.



கடற்கரை,
மனம் முழுக்க புழுக்கத்துடன் மக்கள்,
கடல் நீரில் கால் நனைத்து விளையாடியது மடந்தை,
பிறகு, கரைமணல் நனைய கண்ணீர் விட்டழுதது,
ஒரு குழந்தையாய், ஒரு விதவையாய் இரு முகம்.

பட்டாணி, சுண்டல், சோன்பப்டி,
துப்பாக்கி எதையும் விடவில்லை அவள்,
எனக்குள் ஐயம்,
வாழ்வில் கடைசிநாளா அவளுக்கு?

சாலையில் குழிகள்,
திறமையான என் ஓட்டுனம்,
"இவன் நல்லவன், பெண்களை மதிக்கிறவன்"
சொல்லியது அவள் மனம்.




விடுதி விட்டு திரும்பிவருகயில்,
பிரிவின் துயரம்,
என் வாகனத்திற்கு.



மனம் முழுக்க அவள் நினைவுடன்,
உறக்கமில்லா ஒர் இரவு,
சம்மதம் சொல்வாளா அந்த வெண்புறா?
கையில் தொலைபேசி அழைத்து கேட்டுவிடலாமா?
நம்பர் போட்டு பலமுறை வைத்தாயிற்று,
இப்படியே காலை வரை..

விடியல் வர, வண்டியுடன் அவள் விடுதி பறந்தேன்
முன்னமே போய்கொண்டிருந்தாள்,
அவள் முன் என் வண்டி நிற்க,
குழப்பதுடன் என் முகம்,
குறும்புடன் அவள் "கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?" என்றாள்.
"வாழ்க்கைக்குமா?" என்றேன் மனதில் கொண்ட தைரியத்துடன்.

ஒரு நிமிட நிசப்தம்,
தவறுக்காக குறுகுறுத்தது என் மனது,
"சே, தப்பு பண்ணிட்டியேடா"
இது என் மனம்.

"இந்த நிலைமையில் எனக்கு தேவையா இது?"
இது அவள் மனம்.

அருகிலிருந்த மரத்தின் சருகு சரசரத்தது,
இருவரின் கண்களும் புவி நோக்கி,
வறண்ட தொண்டை,
தடதடத்த கைகளுடன் நான்.

புன்முறுவலுடன் பின்னமர்ந்தாள்,
மெதுவாக நகர ஆரம்பித்தது எங்கள்
"வாழ்க்கை வண்டி"

Sep 4, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்

குரோதம், துரோகம், இச்சை,
துவேஷம், தாபம் - எல்லாம் கடந்துவர;
இங்குமங்கும் அலைபாய்ந்தபடி
மனதினுள் கருமேகங்கள்.


நேற்று,
பொதுவழித்தடம் ஒன்றில்
காலடிப்பட்டு குற்றுயிருராய்
நான் கண்ட செடி.

இன்று,
புதிதாய்
துளிர்விட்டு நுனியில்
பனித்துளி ஏந்தி
என்னைப்பார்த்து புன்னகைத்தது.


நிமிர்ந்து பார்த்தேன்
தெளிவாய் வானம்,
என் மனமும்.

# தமிழ்ச்சங்கம் போட்டிக்காக இல்லை.

Aug 19, 2006

உறவுகள்-தேன்கூடு-நட்பு

கல்லூரி ஆரம்பிக்க இருந்த முந்திய நாள்,
எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி சென்ற போதுதான்
அவனைப்பார்த்தேன்.
என் அறை நண்பன் என்ற
முறையில் ஹாய் சொன்னதோடு
எங்கள் அறிமுகம் முடிந்து தூங்கிப்போனேன்.

மூத்தோருக்கு சல்யூட் அடித்த
அந்தக் கல்லூரியின் முதல்நாளில்தான்,
எந்த பிரிவு என மூத்தோர் கேட்க,
பதில், என்னுடைய பிரிவாக இருக்கையில்
மனதுள் ஒரு சந்தோசம்.
ஆக, இருவரும் ஒன்றாக மூத்தோருக்கு
மரியாதை செலுத்தி விட்டு
கடைசி வரிசையில் ஒன்றாக அமர்ந்தோம்.

அன்றுதான் எங்களை நெருக்கியது நட்பு!

பிறகு என்னிடம் இருந்து
சிகரெட் பழக்கத்தையும்,
இருவருமே தண்ணி பழக்கத்தையும்
பழகியது வெகு சீக்கிரம்.

ஒரே தட்டில் சாப்பாடு,
இருவருக்கும் பொதுவானது
சட்டை, ஷூக்கள், ஒரே சிகரெட்,
ஒன்றாக சைட் என
முதல் செமஸ்டர் முடியும் முன்னே.

இன்னும் இருகியது எங்கள் நட்பு!

இணைபிரியா நண்பர்கள் என்று
நம்மை எல்லோரும் சொன்ன போது
காலர் தூக்கிவிட்ட படி,
நாம் விட்ட சிகரெட் புகைக்குக்கூட
ஒரு கர்வம்.

இரண்டாம் ஆண்டில்,
அப்பாக்களிடம் கெஞ்சி பணம் வாங்கி
பொதுவாக ஒரு பைக் வாங்கியதும்,
பல நேரங்களில் பெட்ரோலுக்கு பெண்களிடம்
அல்லு போட்டு ஊர் சுத்தியதும்,
குரங்கு அருவிக்கு போய்
திரும்பி வருகையில் பெட்ரோல் தீர்ந்து
விடுதி வரைக்கும்,
வண்டி தள்ளியே வேர்வையில்
மறுபடியும் குளித்துவிட்டு,
சிரித்த படி உறங்கிய போது
உடல் வலி மேலிட,
மனதுள் ஒரு திருப்தி.

விடுமுறையில்
உன் வீட்டுக்கு நான் வந்தேன்,
உன் அத்தைப்பெண்ணை
எனக்கு அறிமுகப்படுத்தி
நீ வெட்கப்பட்டாய்

"உனக்கு இதெல்லாம் கூட தெரியுமாட நண்பா"
அப்படின்னு கிண்டலடிச்சு
"நல்லா இருங்க"ன்னு சொல்லி
ஒரு சிவாஜி கணக்கா வாழ்த்தினேன்.

டீ சாப்பிட
வண்டிய எடுத்துக்கிட்டு
ஊட்டிக்கு ஓவர் ஸ்பீடுல போய்
போலீஸ் மாமாகிட்டா மாட்டினது
யாருக்குமே இன்னும் தெரியாது.

ஆச்சு 4 வருசம்,
அரியர் இல்லாம தப்பிச்சுட்டு,
இண்டஸ்ட்ரியல் விசிட்டுக்கு
வீடே இல்லாத ஒரு காட்டுக்கு
போனது நாம் தான்.

கல்லூரியின் கடைசி நாள்,
எல்லார் கண்களிலும் கண்ணீர்,
அவனையும் என்னையும் தவிர.
"எங்கேடா நண்பா போயிருவா,
ஒரு பீர் அடிச்சுட்டு ராத்திரி கோவில்பட்டியில
பஸ் ஏறினா காலையில உன்னோட ஈரோட்டில்
ஒன்னா தம் அடிக்கப்போறேன்"
அப்படின்னு என்னைத்தேற்றிவனே
அவன் தான்.

பிறகு கணினி படிக்க
அவன் சென்னை போனதும்,
எனக்கு அவ்வளவு வசதியில்லாம
ஈரோட்டிலேயே படித்தேன்,
ஆனாலும் ஒரே கோர்ஸ்.

எப்படியோ அடிச்சு புடிச்சு
பெங்களூர்ல நீ
நல்ல வேலை வாங்கிட்ட,
ஈரோட்டுல,
சொற்ப சம்பளத்துல
நானும்தான்.

எத்தனையோ தடைவ
நீ என்னை
"பெங்களூருக்கே வந்துருடா" அப்படின்னு
கெஞ்சிய போதும்
"தோட்டத்த பார்த்துக்கனும் நண்பா"
அப்படின்னு சொல்லி
தட்டி கழிச்சுட்டே வந்தேன்.

வேலைப்பளு காரணமா
கொஞ்சம் கொஞ்சமா
பிடி தளர்ந்துகிட்டே போனது
நமது நட்பு.


நீ அமெரிக்கா போனது கூட
அங்கிருந்து நீ போட்ட
மின்னஞ்சல் மூலம்தான்
தெரிய வந்தது.

கொஞ்ச காலம்,
நம்மை மறந்து ஓடிப்போனது.
நாமும் வாழ்க்கையின் சீற்றத்தில்
காலத்தினையும் மறந்து போனோம்.

நானும் டில்லியில்
நல்ல வேலையில் சேர்ந்து,
குடும்பதோட
அங்கே போனபோதுகூட
உன்னை மறக்கவே இல்லைடா.
ஒரு 2வாரம் கழிச்சு
நான் உனக்கு போட்ட
மின்னஞ்சலுக்கு பதிலே வரலை.
அப்படியே மறந்தும்,
வேலையினால் மரத்தும் போனேன்.
சில மாசம் கழிச்சு
சென்னைக்கு வந்த போது
உனக்கு போட்ட மின்னஞ்சல்,
டிஸ்க் கோட்டா ஓவர்ன்னு
எனக்கே திரும்பி வந்துச்சு.

வீட்டுக்கு போன் பண்ணி
உன்னோட தொலைபேசி
எண்ணை வாங்கி வெச்சுகிட்டு,
ISDன்னா நெறையா ஆகுமேன்னு
நினைச்சு அடுத்த மாசம் சம்பளம்
வாங்கி பேசிக்குவோம்ன்னு விட்டுட்டேன்.
இப்படியே ஒரு 2 வருசம்
சம்பளம் வாங்கிட்டேன்.

அதுக்கும் ஒரு நாள்
முடிவு வந்துச்சு.
என்னோட அலுவலகத்துலயே
எனக்கு ISD வசதியோட
தொலைபேசி தர,
நண்பனுக்குதான் முதல்ல கூப்பிட்டேன்.

இந்த எண் விளங்காம போயிருச்சுன்னு
ஒரு வெள்ளக்காரமா சொன்னப்பதான்
நம் நட்பின் தூரம்
தெரிய ஆரம்பிச்சது.

நான் ஈரோடு வீட்டுக்கு போனபோதுதான்
உன்னோட
கல்யாணப் பத்திரிக்கையைப் பார்த்தேன்.
ஒரு வருசம் முன்னாடியே ஆன
கல்யாணத்துக்கு என்னன்னு
வாழ்த்து சொல்ல? எப்படியோ
உங்க வீட்டுக்கு போன் போட்டு
உன்னோட செல் போன் நம்பர் வாங்கி
பார்த்தா சென்னையிலேயே
இருந்து இருக்க 3 வருசமா.

பல வருசம் கழிச்சு
நான் கூப்பிட்ட முதல் போன்கால்
"என்னை கண்டுபுடின்னு" நான் சொல்ல,
நீ என் குரல் மறந்து
"எங்கையோ கேட்ட குரல் மாதிரி இருக்கே"
அப்படின்னு சொன்ன போது
நமது நட்புக்குள்
ஒரு பெரிய இடைவெளி தெரிஞ்சுது.


எதேச்சையாக,
டிராபிக் சிக்னலில் ஹாய் சொல்லும்போதும்,

தியேட்டரில அசந்தர்ப்பமாக பார்த்து
படம் ஆரம்பிச்சுருமுன்னு அவசரத்துல
"எப்படிடா இருக்கேன்னு" கேட்கும் போதும்,

யாஹூ அட்ரஸ் புக்கில
உன்னோட பிறந்து நாள்
ரிமைண்டர் வரும்போதும்,

இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது நம்முடைய நட்பு.
------------------------------------------------------------
இளவஞ்சி/நிலா, வாக்களித்து மீண்டும் எனக்கு ஆறுதல கிடைக்கச் செய்த அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிங்க!

Aug 17, 2006

கனவும் ஆகஸ்டு 15ம்


விமான நிலையம்
கடக்கும் போதும்,
வானத்தில சப்தம்
எழுப்பிய படி
விமான செல்லும் போதும்,

நண்பனை வெளிநாட்டுக்கு
வழியனுப்ப அதே நிலையம்
வரும்பொழுதும்,

நண்பனிடம் நெட் சாட்டிங்கில்
பேசியபடி என்
ரெசியும்மை அவனிடம் நைசாக
தட்டிவிட்ட போதும்

டாலரும், பவுண்டும்,
ஏன் ஒரு ஆன் சைட் கூட
கிடைக்காதா என்ற ஏக்கத்தில்,
ஆதங்கத்தில், வருத்தத்தில்.....


சொல்கிறேன்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

*(விவசாயி என்ற முகமூடியை கழட்டிய என் முதல் கவிதை)

Jul 28, 2006

நன்றி!

மரணம்!

சிலருக்கு சோகத்தையும்,
பலருக்கு வெறுமையும் தரும்,
எனக்கோ அந்த மரணம்
ஆறுதல் தந்து இருக்கிறது.

தலைப்பிட்ட வாத்தியாருக்கும்,
இந்த இடத்தை அடைய
வழிவிட்ட அனைவருக்கும் நன்றி!

தளம் அமைத்த
தேன்கூட்டிற்கும்,
பரிசளிக்கும்
தமிழோவியத்துக்கும் நன்றி!

வாக்கு தந்து ஏமாற்றும்
அரசியல்வியாதி போலல்லாமல்
நான் கேட்காமலே
வாக்களித்து எனக்கும்
ஒரு இடம் கிடைக்க செய்த
அத்துனை மக்களுக்கும்
என் நன்றி!


இதன் முன்னுரை

வாக்களித்த அந்த 30 பேருக்கும் என் இதயபூர்வமான நன்றிங்க!

Jul 5, 2006

காலதேவனை வேண்டியபடி

தேன்கூடு "மரணம்" போட்டிக்காகவும்

சிறாராக,
பள்ளி முடிந்து திரும்புகையில்
யார் முதலில்
நம் தெருமுனை தொடுவது
என்றொரு போட்டி,
கன மழை,
இருவரின் கையிலும் குடை,
ஆனாலும் நனைந்த படி
முதலில் தெருமுனை தொட்டேன்.

கண்ணீருடன் நீ
உன் வீடு சென்றாய்,
அன்று முதல் உன்னிடம்
தோற்க ஆரம்பித்தேன்.



தோற்ற என்னை
சில நேரங்களில்
எள்ளி நகையாண்டாலும்,
என்றுமே
ஜெயிக்க விட்டதில்லை
மழை நீரில்
நீ விட்ட கண்ணீர்.

நீ
பெரிய மனுஷியாகிவிட்ட
போது வெட்கப்பட்டதை
சேமித்து வைத்திருக்கிறேன்
அடுத்த ஜென்மத்திற்கும் சேர்த்து




நம் திருமணத்தன்று இரவு
யாருக்கும் தெரியாமல்
உன் அறையில்
நான் நுழைந்து முத்தமிட்டு,
முன் வைத்த
பந்தயத்தில் ஜெயித்தேன்,
உனக்கும் பிடிக்கும் என்பதால்!

திருமண நாள் அதிகாலை,
எல்லோரும் முழிக்கும் முன்
யாருக்கும் தெரியாமல்
நாம் இருவரும்
சமையல் அறையில்
முத்தத்துடன் காபி பருகியது
யாருக்கு தெரியும்?
அந்த காபியின்
கடைசி சொட்டு ருசி
இன்றுவரை
எங்கேயும் கிடைக்கவில்லை!

தாலி கட்டிய போது
ஏன் அழுதாய்
என்று கேட்டதற்கு
உதடு சுழித்து தெரியாதென்றாய்,
எனக்கு
பதில் கிடைக்காவிடினும்
நீ உதடு சுழித்தது
பிடித்துப் போனது




முதலிரவு அன்று
நமக்குள் ஓடிய
குதிரைகள் அடங்கிய பின்
நீ கொடுத்த முத்தம் சொன்னது
காதலையா காமத்தையா?

வியர்வை துடைத்து விட்ட போது
காதில் கேட்டாய்
"இன்னுமொருமுறை இந்த
வியர்வை வேண்டுமா
இல்லை நான் வேண்டுமா?"
எதை எடுப்பது, எதை விடுப்பது?

நமக்குள் கூடல்கள் அதிகம்,
ஊடல்களை விட!
மழலையின் புன்னகை பார்த்து
நாம் மறந்த ஊடல்கள்
அதை விட அதிகம்.




மகளை பள்ளிக்கு
அனுப்பிய அந்த
முதல் நாளில்,
சிரித்தபடி டாட்டா சொன்னது
என் செல்ல மகள்,
கண்ணீருடன் நீ,
எனக்குள் ஐயம்
இருவரில் யார் குழந்தை?

மகளுக்கு
முதலில் தாவணி அணிய
சொல்லித் தருகையில்,
நீ வெட்கப்பட்டதை பார்த்து
மகள் திட்டியதும்,
அதற்காக என்னிடம் நீ முறையிட்டபோது
நான் சிரித்ததையும்
நம் முற்றத்து விநாயகரைத்
தவிர வேறு யாருக்குத் தெரியும்?



செல்ல மகள் திருமணம்,
கண்ணீருடன் நான்,
விசும்பலுடன் நீ,
இவ்வளவு நாள் மகள்
அணைத்து உறங்கிய
டெடி கரடி
அனைத்தும் அன்றுதான்
தனிமையாய்!

பேரனுடன் கொஞ்சிய நாட்களில்
நாம் கண்ட பேரின்பம்
நாம் வணங்கிய
தெய்வங்கள் தந்ததில்ல!



என்னை விட்டு
நீ இறைவனிடம்
சென்ற பிறகும் பல
இரவுகள் இப்படித்தான்
இந்த கவிதைகளை
படித்து சுகம் காண்கிறேன்.
இன்னும் குறையவில்லை
நீ கொடுத்த சுகங்கள்!


இன்று
தனியறையில் நான்,
உன் நினைவுகளோடு
வாழ்ந்தபடி.
ஒரு முற்றுபுள்ளியா
நம் சுகதுக்கத்தை
முடிவு செய்யப்போகிறது?

என்னுள் இருக்கும்
இந்த நினைவுகளை
உனக்கு வந்த
மரணத்தால்
அழிக்கமுடியவில்லை.

உன்னிடம் வந்துவிட
காலதேவனை வேண்டியபடி
கண்ணீரையும்,
உன் நினைவுகளையும் சுமந்தபடி,
இன்னும் நான்!

Jun 28, 2006

வண்ணத்துடன் என் பூச்சி


அவள் மீது
பட்டாம்பூச்சி
சிறகடித்தது
என் இதயம்!


அவள் காதோரமாக
பறந்து சென்ற பட்டாம்பூச்சி
என் காதலை
அவளிடம் சொல்லியிருக்குமோ?

Jun 26, 2006

அந்தி மாலை!

பொழுதுபோக்கிலேயே அதிக செலவு வைப்பது புகைப்படம் எடுப்பது(1990களில்). வரப்பில் என்னுடைய சில அரிய(?!) புகைப்படத்தையும் போட எங்க வீட்டுல சில பேரு சொல்ல தட்ட முடியல. அதனால இனிமே சில நான் சுட்ட (திருடியது இல்லை) படத்தினயும் வரப்பில் ஆர் அமர்ந்து காணலாம்.

1993, ஐயன் பொட்டி கேமரா வாங்கிக் கொடுத்த காலம் அது. சந்தோஷ் சிவனும், பி.சி யும் நமக்குள்ள குருவா இருந்த போதுதான் இந்த படம் புடிச்சேன். எங்க மொட்ட மாடியில இருந்து எங்க ஊரு மலையை பல்லாயிரம் தடவை பார்த்து இருந்தாலும் இந்த படம் ஒரு வித்தியாசமான ஒரு பார்வையை தந்தது.